
ரயில்கள் பல கிலோமீட்டர் தூரத்தில் வந்தாலே ரயில்வே லெவல் கிராசிங்கை மூடிவிடுவது வழக்கம். ஆனால் தெலங்கானாவில் ஒரு பெண் செய்த காரியம், ரயில்வே அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சங்கர்பல்லி என்ற இடத்தில் சாலையில் செல்வதற்கு பதில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டினார். அவர் சர்வ சாதாரணமாக தனது காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டிச் சென்றார். அவரை நிறுத்த ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் முயற்சி செய்தனர். ரயில்வே போலீஸார், ரயில்வே ஊழியர்கள் என 20 பேர் தண்டவாளத்தில் அப்பெண் ஓட்டிச்சென்ற காரை பின் தொடர்ந்து விரட்டிச்சென்றனர். அப்பெண் நிற்காமல் காரை ஓட்டிக்கொண்டே இருந்தார். இச்சம்பவத்தால் அந்த வழியில் வரவேண்டிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன அல்லது அந்த ரயில்கள் வேறு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டது. அப்பெண் 6 முதல் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு காரை தண்டவாளத்தில் ஓட்டிய பிறகு பிடிபட்டார். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை 20 பேர் சேர்ந்து விரட்டி பிடித்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ரயில்வே போலீஸ் அதிகாரி சந்தனா கூறுகையில், ”தண்டவாளத்தில் காரை ஓட்டிய பெண் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று தெரிகிறது. அவரிடமிருந்து டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அப்பெண் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், பன்னாட்டு நிறுவனத்தில் சமீப காலம் வரை வேலை செய்ததும் தெரிய வந்துள்ளது. தற்கொலை நோக்கத்தில் இது போன்று தண்டவாளத்தில் கார் ஓட்டினாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சம் நிலவியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 முதல் 15 ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பெங்களூருவில் இருந்து ஐதராபாத் வந்த ரயில்கள் 45 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தன.