• June 26, 2025
  • NewsEditor
  • 0

திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, ரூ.174 கோடி மதிப்பிலான 90 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ.273.83 கோடி செலவில் 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிச் சிறப்பித்தார்.

மொத்தமாக ரூ.517 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை இந்த விழாவின் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யக்கூடிய ஒன்றிய அரசால்கூட நம்முடைய வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. அதனால்தான் ஒன்றிய அரசு `தமிழ்நாடு 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடப் பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருப்பதாக’ சொல்லியிருக்கிறது.

இந்தியாவின் ஜி.டி.பி-யில் நம்முடைய பங்கு எவ்வளவு தெரியுமா? 9.21 விழுக்காடு. அதாவது, நாட்டின் வளர்ச்சியில் 100-ல் 10 விழுக்காடு நாம் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, சமூக முன்னேற்றக் குறியீடுகளிலும் நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம்.

உயர்கல்வி சேர்க்கை விகிதத்திலும் முதலிடம் தமிழ்நாடு. வறுமை இல்லாத நிலையை உருவாக்குவதில் 2-ம் இடத்தில் இருக்கிறோம். நீடித்த வளர்ச்சி குறியீட்டிலும், மருத்துவ குறியீட்டிலும் 3-வது இடம்.

பணவீக்கம் குறைந்த மாநிலம். நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

வேளாண்துறை மூலமாக பாசனப் பரப்பையும், வேளாண் உற்பத்தியையும் அதிகரித்திருக்கிறோம். தொழிலாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம், வளர்ச்சி பல ஆண்டுகளாக அதிகமாக இருக்கிறது.

திருப்பத்தூர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருப்பத்தூர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

இந்த வளர்ச்சிக்கு அடிப்படை காரணம், தலைநகரான சென்னையைச் சுற்றி மட்டும் வளர்ச்சி செய்யப்படாமல், தமிழ்நாட்டினுடைய அத்தனைப் பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி செய்யவேண்டும் என்கிற எண்ணம்தான்.

எல்லாருக்கும் எல்லாம். எல்லா மாவட்டங்களுக்கும் எல்லாம் என்கிற வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம். நான் கோட்டையிலிருந்து மட்டும் பணிகளைச் செய்யவில்லை.

தொடர்ந்து மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். குறைந்தது ஒரு மாதத்துக்கு 3 மாவட்டங்களுக்குப் போகிறேன். இந்த மாதத்தில் மட்டும் சேலம், தஞ்சாவூர், அடுத்து இப்போது திருப்பத்தூருக்கு வந்திருக்கிறேன்.

இன்று காலையில்கூட திருப்பத்தூருக்கு என்னத் தேவைகள் இருக்கிறது என்று கேட்டேன். கேட்டுவிட்டு அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியுமா? அதனால்தான் இந்த மாவட்டத்துக்கான 5 அறிவிப்புகளை இப்போது வெளியிடப் போகிறேன். முதலாவது அறிவிப்பு, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய நெக்னாமலை பகுதியில் வாழக்கூடிய குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், பொதுமக்கள் மருத்துவ வசதிப் பெறவும், வேளாண் பொருள்களை விற்பனைச் செய்யவும் ரூ.30 கோடி செலவில் 7 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு, குமாரமங்கலம் பகுதி மக்களுக்குச் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்கின்ற வகையில் அந்தப் பகுதியில் ரூ.6 கோடி செலவில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு, நல்லகொண்டா பகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்காவையொட்டி 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குகின்ற வகையில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடி செலவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு, திருப்பத்தூர் நகர மையப் பகுதியில், பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தில் ரூ.18 கோடி செலவில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்படும். ஐந்தாவது அறிவிப்பு, ஆம்பூர் நகர மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடி செலவில் புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும்.

இந்த நிலையில், ஒன்றியத்தில் இருக்கின்றவர்களின் எண்ணம் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு மக்களை மதம், சாதியால் பிளவுபடுத்த முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களால் முடியாததால், இங்கு இருக்கின்ற அ.தி.மு.க கட்சியையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் மதத்துக்காகக் கவலைப்படுகிறார்கள். இதுதான் அவர்களின் அரசியல். `தமிழ்நாட்டில் மதத்துக்கு ஆபத்து’ என்று அ.தி.மு.க-வை வைத்துக்கொண்டு பா.ஜ.க-வினர் பேசுகின்றனர். உண்மையைச் சொன்னால், தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணிக்குத்தான் இப்போது ஆபத்து.

கட்சியை வளர்க்க `மிஸ்டு கால்’ கொடுத்துப் பார்த்தார்கள். முடியாமல் போனதால், தங்களின் அரசியல் லாபத்துக்காக கடவுளின் பெயரை `மிஸ் யூஸ்’ செய்கிறார்கள். இவர்களின் `போலி பக்தி’யை, அரசியல் நாடகத்தை இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள்.

இது தமிழ்நாடு. தந்தை பெரியார் உருவாக்கிய மண். அண்ணா வளர்த்த மண். கலைஞர் மீட்ட மண். அனைத்து மதத்தினரும், தங்கள் உரிமையோடு பிற மதத்தினருடன் நல்லிணக்கத்துடன் வாழுகின்ற மண் இது.

கடந்த 4 ஆண்டுக் காலத்தில், தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 3,000 கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். அதேபோல், ரூ.84 கோடி மதிப்பீட்டில் தேவாலயங்களையும், மசூதிகளையும் புனரமைக்க நிதி ஒதுக்கியிருக்கிறோம். இதுதான் நம்முடைய திராவிட மாடல்.

இதையெல்லாம் பார்த்துத்தான் மதவாத அரசியல் செய்கின்றவர்களுக்குப் பற்றிக்கொண்டு எரிகிறது. அவர்களால் தமிழ்நாட்டுக்குச் செய்த வளர்ச்சியைப் பற்றிப் பேச முடியவில்லை. ஓட்டுக் கேட்க முடியவில்லை. முடியாது. செய்திருந்தால்தானே சொல்ல முடியும்.

`மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால், அங்கேயும் தி.மு.க ஸ்கோர் செய்துவிட்டார்களே..’ என்று கதறிக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது, ஒரு குழப்பத்தை ஏற்படுத்தப் படாதபாடு படுகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் சொல்கிறேன். இது தந்தை பெரியார் பண்படுத்தியிருக்கின்ற மண்.

பேரறிஞர் அண்ணாவால் மேன்மைப்படுத்தப்பட்ட மண். தலைவர் கலைஞரால் வளர்க்கப்பட்ட மண். இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள். அதை கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணா பெயரில் கட்சி நடத்துகின்ற கூட்டம்.

திருப்பத்தூர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருப்பத்தூர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அண்ணா பெயரையே அவர்கள் அடமானம் வைத்துவிட்டார்கள். இன்று கட்சியை அடமானம் வைத்தவர்கள், நாளை தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த மண்ணுக்கெதிராகப் பின்னப்படுகின்ற சதி வேலைகளைப் புரிந்து, தமிழினத்துக்கு எதிரானவர்களுக்கும், எதிரிகளுக்கும், துணைபோகின்ற துரோகிகளுக்கும் ஒருசேரச் சிறப்பான பாடம் புகட்ட வேண்டும்.

உங்களுக்கு அரணாக என்றைக்கும் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகமும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் இருப்போம். அதேபோல், நீங்களும் என்றைக்கும் எங்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்’’ என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி உட்பட எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

விழாவை முடித்துக்கொண்டு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *