• June 26, 2025
  • NewsEditor
  • 0

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரின் போது, ஏதேனும் உதவி வேண்டுமா என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கேட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது, அப்போது வேட்பாளராக இருந்த ட்ரம்ப், ‘அமெரிக்காவின் வரிப்பணம் உக்ரைன் போருக்கு செலவிடப்படுகிறது’ என்றக் குற்றச்சாட்டை முன்வைத்து வாக்கு சேகரித்தார். அமெரிக்க அதிபராக தேர்வானதற்குப் பிறகு உலகளாவிய அமைதியை உருவாக்குபவராக தன் பிம்பத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார். இதற்கு கடும் சவாலாக இருப்பது ரஷ்யா – உக்ரைன் போர்.

இந்த இருநாடுகளுடனான பேச்சுவார்த்தையில் அவர் இதுவரை வெற்றிபெறவில்லை என்று தெரிகிறது. உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்கி, ரஷ்யா மீது வலுவான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைனும் அதன் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளும் விரும்புகின்றன. ரஷ்யா அதிபர் புதினுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

ட்ரம்ப், புதின்

இந்த நிலையில், (Fox News) ஃபாக்ஸ் நியூஸ் வழங்கியிருக்கும் செய்தியின்படி, “நேட்டோ உச்சிமாநாட்டிற்குச் சென்ற ட்ரம்ப், “இஸ்ரேல் – ஈரான் போரின்போது ரஷ்யா அதிபர் புதின் என்னை அழைத்து ‘இந்தப் போருக்கு ஏதாவது உதவி வேண்டுமா?’ எனக் கேட்டார். நான் ஆம் உதவி வேண்டும் ஆனால் இந்தப் போருக்கு அல்ல. ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் அமைதிக்கான தீர்வு காண வேண்டும். அதை முதலில் செய்யுங்கள் எனக் குறிப்பிட்டேன். ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தம் வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறேன்” என்றார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பைடன் இருந்தபோது அமெரிக்கா வழங்க ஒப்புக்கொண்ட ராணுவ உதவிகள் வரும் மாதங்களில் முடிந்துவிடும். அதன் பிறகு, இப்போது அதிபராக இருக்கும் ட்ரம்ப் உக்ரைனுக்கு ஏதேனும் உதவிகள் வழங்குவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *