
பாமக-வில் கடந்த சில மாதங்களாகவே நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் அதிகார மோதல் நிலவிக்கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் பா.ம.க சேலம் மாநகர மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான அருள் மற்றும் பா.ம.க கௌரவத் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி ஆகியோர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அன்புமணி நடத்திய பொதுக்குழுக் கூட்டத்தைத் தவிர்க்கவே இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சர்ச்சைக்குரிய பேச்சுகள் எழுந்தன.
நேற்றைய தினம் பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அருளுக்கு பா.ம.க இணை பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அன்புமணியின் கூட்டத்தைத் தவிர்பதற்காக மருத்துவமனையில் சேரவில்லை என்று அருள் விளக்கமளித்தார்.
நேற்று மாலை அருள் கவனித்து வந்த சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு க.சரவணன் என்பவரை அன்புமணி நியமித்தார்.
காலையில் அருளை மாநில பொறுப்பில் தந்தை நியமித்த நிலையில், மாலையில் அவரின் மாவட்டச் செயலாளர் பதவியில் வேறொருவரை மகன் நியமித்திருப்பது பா.ம.க உள்கட்சி அரசியலை மேலும் பரபரப்பாக்கியது.
“அருள் சரியாகச் சொல்லியிருக்கிறார்”
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “பா.ம.க கட்சிக்கு என் மூச்சிருக்கும் வரை நானே தலைவர். அன்புமணி செயற்தலைவர். இது என் நண்பர் கலைஞரின் பாணி.
அவர் கடைசிவரை சர்க்கர நாற்காலியில் இருந்தும் கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைவராக இருந்தார். இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள், அப்போது முணுமுணுக்கவில்லை” என்று கூறினார்.
தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி போஸ்டர் கிழிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “ஏதாவது விஷமிகள் செய்திருப்பார்கள். போஸ்டர்களை யார் வேண்டுமானாலும் ஒட்டலாம். ஆனால் கிழிக்கக் கூடாது. அது நாகரீகமற்றது” என்றார்.

நேற்றுமாலை அன்புமணி அருளின் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மற்றொருவரை நியமித்தது குறித்து அருள் பேசுகையில், “கட்சியில் யாரையும் பதவியில் அமர்த்தவும் நீக்கவும் ஐயா (ராமதாஸ்) ஒருவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது” எனக் கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டபோது,
“அருள் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார். மாவட்டச் செயலாளர் பொறுப்புடன் கூடுதலாக அவருக்கு மாநில அளவிலான இணைப் பொதுச் செயலாளர் பொறுப்பை வழங்கியிருக்கிறோம்” எனப் பதிலளித்தார் ராமதாஸ்.
பொதுக்குழு கூட்டம் எப்போது?
இந்து முண்ணனி நடத்திய முருகன் மாநாட்டில் போடப்பட்ட அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களை விமர்சிக்கும் வீடியோ பற்றிய கேள்விக்கு, “இது வருந்தக் கூடிய ஒன்று. தமிழ் மக்களுக்காகத் தொண்டாற்றி தமிழர்கள் மனதில் வாழும் மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்தக் கூடாது.
அவர்களது இந்தக் கருத்துக்களில் எங்களுக்கு மாற்றுக்கருத்து உள்ளது எனக் கூறலாமேத் தவிர, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது”
மேலும் பாமக விவகாரங்கள் பற்றி பேசிய அவர், “தேர்தல் நெருங்கும் சமயத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அதற்கு முன்னர் நிர்வாகக் குழு, மாநில செயற்குழுக் கூட்டங்கள் கூட்டப்பட்டு, அவர்கள் கருத்துக்களைக் கேட்டு பொதுக்குழு கூட்டப்படும்.
நானே தலைவராக இருக்கிறேன். தேர்தல் யுத்திகள், அணி சேர்வது குறித்து பொதுக்குழுவினர் முடிவெடுப்பார்கள். பொதுக்குழு கூடும்போதே இளைஞரணித் தலைவர் குறித்தும் அறிவிப்போம்” என்றார்.

“என் மனசாட்சிப்படி தலைவராக இருக்கிறேன்”
அத்துடன் அன்புமணி தலைவராக இருக்க விரும்புவது குறித்து, “அன்புமணிக்குக் கொடுக்கப்பட்டுள்ள செயல்தலைவர் பொறுப்பு முக்கியமானது. அதை அவர் ஏற்றுக்கொண்டால் பிரச்னையே இல்லை. 3 ஆண்டுகளுக்குத் தலைவர் பொறுப்பில் இருந்துள்ளார். இப்போது என் மனது பா.ம.க தலைவராக இருக்க வேண்டும் என்கிறது” என்றார்.
மேலும், “இந்தக் கட்சியை வளர்க்க நான் பட்டபாடு இந்தியாவில் யாரும் பட்டிருக்க மாட்டார். இப்போது என்மனது மூச்சிருக்கும் வரை பா.ம.க தலைவராக இருக்க சொல்கிறது. நான் பதவி சுகத்தை அனுபவிக்கிறவன் கிடையாது. அப்படியிருந்தால் நான் எப்போது நினைக்கும் மத்திய பொறுப்பில் சென்று அமர்ந்திருப்பேன்.
ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. மோடி வரை பிரதமர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கிறேன். எத்தனையோ எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களை மத்திய அமைச்சர்களை உருவாக்கியிருக்கிறேன். தொண்டர்களை உயர்த்திவிட்டு அழகு பார்த்தவன் நான். இப்போது என் மனசாட்சிப்படி, கட்சியின் தலைவராக இருக்க ஏற்றுக்கொண்டுள்ளேன்.” என்றும் பேசியுள்ளார்.