
‘பழக் கட்சியில் நிலவும் பிரச்னைகள் தேர்தலுக்குள் தீருமா… இலை – மலர் கட்சிகளுடன் கூட்டணியில் சேருமா..?’ என்பதுதான் அரசியலில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இந்தநிலையில், இலைக் கட்சியின் மாஜியான ‘அன்பான’வருடன், பழக்கட்சியின் மூத்த நிர்வாகியின் வாரிசும்… தயாரிப்பு நிறுவன நிர்வாகியுமான ‘குன்று’ புள்ளி, தற்செயலாகச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, ‘பழக்கட்சியில் உங்களுக்கு அரசியல் எதிர்க்காலம் இல்லை… அப்பாவோடு நம்ம பக்கம் வந்துவிடுங்கள்…’ என வாரிசுக்குத் தூபம் போட்டிருக்கிறார் அன்பான மாஜி. அத்துடன், இலைக்கட்சித் தலைமையின் வாரிசுப் புள்ளியிடமும் பேசவைத்திருக்கிறார். ‘யோசித்துச் சொல்கிறேன்…’ என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லிவைத்திருக்கிறாராம் ‘குன்று’ புள்ளி!
எப்படியும் இணைப்பு நடந்துவிடும் என்கிற நம்பிக்கையில், எடப்பாடியை விமர்சனம் செய்யாமல் தவிர்த்துவருகிறார் ஓ.பி.எஸ். ஆனால், ஜில் மாவட்டத்தில் தலைகீழாக நடக்கிறதாம். அதாவது, ஜில் மாவட்ட ஓ.பி.எஸ் தரப்பு ‘மகா கவிஞர்’ பெயர்கொண்ட புள்ளி, கிடைக்கும் மேடைகளில் எல்லாம் அ.தி.மு.க மாவட்டப் புள்ளிகளை வறுத்தெடுக்கிறாராம். குறிப்பாக, ஒன்றாக இருந்த காலங்களில் இணைந்து செய்த அதிகார துஷ்பிரயோக அடாவடிகளை, பொதுவெளியில் போட்டு உடைக்க ஆரம்பித்திருக்கிறாராம். ‘தேர்தல் நெருங்கும் நிலையில் இப்படி செய்கிறாரே..?!’ எனப் புலம்புகிறார்களாம் அ.தி.மு.க ஜில் மாவட்ட நிர்வாகிகள்!
தஞ்சாவூருக்கு சமீபத்தில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு பல்வேறு திட்டப்பணிகளைத் துவங்கி வைத்தார். சூரியனார் கோயில் ஊராட்சியில், புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் திறந்துவைத்தார். ஆனால், முதல்வர் வந்துசென்ற சில நாள்களிலேயே அலுவகத்தின் மேற்கூரை உள்பூச்சு முற்றிலுமாக இடிந்து விழுந்திருக்கிறது. இந்தச் சர்ச்சையை மறைக்க, ‘முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் விசிட் வெற்றிகரமாக நடத்தப்பட்டது’ என மாவட்ட உச்ச அதிகாரியும், மாவட்ட மாண்புமிகுவும் அனைத்து அதிகாரிகளுக்கும் பிரியாணி விருந்து வைத்திருக்கிறார்கள். கட்டடம் இடிந்த விவகாரத்தோடு, அதிகாரிகளின் பார்ட்டி விஷயத்தையும் எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்க, டென்ஷனாகிவிட்டதாம் ஆட்சி மேலிடம்!
பொதுவாக ‘ஆகமத்துக்கு ஆபத்து’ என்று பிரச்னை கிளப்பும் இந்து முன்னணி மீதே, முருகன் மாநாட்டில் ஆகமம் மீறப்பட்டதாக புகார் கிளம்பியிருக்கிறது. அதாவது, “முருகனின் ஆறுபடை வீடுகள் பூஜை, தமிழ் ஆகமங்களுக்கு நேர் எதிரானது. முருகன் சிலையை ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யாமல், அரசியலுக்காகப் பொருட்காட்சி பொம்மைபோல் வைத்து பூஜை செய்துள்ளனர். ஆகம முறைப்படி உயிர் உண்டாக்கப்படாத முருகன் சிலையை வணங்க வைத்திருப்பது, பக்தியின் பெயரிலான அத்துமீறல்…” என ஆன்மீகவாதிகள் புகார்களைக் கிளப்புகிறார்கள். மேலும், இதுபோன்று இனி ஆகம விதிமீறல் நடக்காமல் இருக்க, சில அமைப்புகள் நீதிமன்றத்தை நாடவும் முயற்சி செய்துவருகிறார்களாம்!
கடந்த ஓராண்டாக, புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர்களுடன் நெருங்கமாக உறவாடி வந்த லாட்டரி அதிபரின் வாரிசு, தற்போது தனி ரூட்டில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறாராம். சமீபத்தில் மதுரையில் நடந்த இந்து முன்னணி மாநாட்டுக்கு, பத்துப் பேருந்துகளில் ஆட்களைத் திரட்டி அனுப்பி வைத்திருக்கிறாராம். ‘நீங்கள்தான் அடுத்த முதல்வர், அடுத்த எம்.பி என ஏகத்திற்கும் உசுப்பேற்றி, அவரிடமிருந்து எக்கச்சக்கமாகக் கறந்துவிட்டார்கள் புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர்கள் சிலர். இனியும் அவர்களை நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை என முடிவெடுத்திருப்பவர், இப்போது தன்னிச்சையாகவே களமிறங்கியிருக்கிறார். இதனால், அள்ள அள்ள கொட்டிய அட்சயப் பாத்திரம் கைவிட்டுப்போன அதிர்ச்சியில் இருக்கிறார்களாம் சில பா.ஜ.க நிர்வாகிகள்’ என்கிறது காவி வட்டாரம்!