
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த தசாப்தத்துக்கான பரீட்சார்த்த முயற்சியின் ஒரு அணியாகத்தான் இங்கிலாந்தில் களமிறங்கியிருக்கிறது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி.
வழக்கமாக ஒரு தொடருக்கு முன்பு அதற்கான அணிப் பட்டியல் வெளியாகும்போது, ஏன் இவரை எடுக்கவில்லை, எதற்காக இந்த வீரரை எடுத்தீர்கள் என கேள்விகள் எழும்.
அத்தகைய கேள்விகள் இந்தத் தொடருக்கு முன்பும் எழுந்தது.
குறிப்பாக, பும்ரா, கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் இருந்தும் கில் ஏன் கேப்டனாக்கப்பட்டார் என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் இவையனைத்தையும் விட, முழுக்க முழுக்க வணிகம் நிறைந்த ஐ.பி.எல்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதற்கான தொடரா என்பதுதான் இங்கு முக்கியமான கேள்வியே.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர் யார், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் யார் என்றால் சாய் சுதர்சன், பிரசித் கிருஷ்ணா என்று பெரும்பாலானோருக்கு எளிதில் தெரிந்திருக்கும்.
இவர்கள் இருவருமே, இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் களமிறங்கினர்.
இதுவே கடந்த ரஞ்சி தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் யார், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் யார் என்றால் பெரும்பாலானோருக்கு தெரியுமா என்பதே சந்தேகம்தான்.

கடந்த ரஞ்சி சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் – விதர்பாவின் யஷ் விஜய் ரத்தோட் (960 ரன்கள்), மத்தியப்பிரதேசத்தின் ஷுபம் சர்மா (943 ரன்கள்), ஹைதராபாத்தின் தரம்சந்த் அகர்வால் (934 ரன்கள்).
இதில் யஷ் விஜய் ரத்தோட் கடந்த இரண்டு சீசன்களாகத்தான் ரஞ்சி ஆடிவருகிறார். மொத்தமாக 18 போட்டிகளில் 48 ஆவரேஜில் 1,505 ரன்கள் குவித்திருக்கிறார்.

அதேசமயம், இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஷுபம் சர்மா, தரம்சந்த் அகர்வால் ஆகியோர் தலா 66 போட்டிகள் விளையாடியிருக்கின்றனர்.
ஷுபம் சர்மா 42 ஆவரேஜில் 4,145 ரன்களும், தரம்சந்த் அகர்வால் 46 ஆவரேஜில் 5,004 ரன்களும் குவித்திருக்கின்றனர்.
அதேபோல், கடந்த ரஞ்சி சீசனில் அதிக விக்கெட் எடுத்தவர்களில் டாப் 3 – விதர்பாவின் ஹர்ஷ் துபே (69 விக்கெட்டுகள்), ஜம்மு காஷ்மீரின் அகுயிப் நபி (44 விக்கெட்டுகள்), மும்பையின் ஷம்ஸ் ஜாகிர் முலானி (40 விக்கெட்டுகள்).
இதில், ரஞ்சி கரியரில் ஹர்ஷ் துபே மொத்தமாக 19 போட்டிகளில் 98 விக்கெட்டுகளும், அகுயிப் நபி 29 போட்டிகளில் 90 விக்கெட்டுகளும், ஷம்ஸ் முலானி 50 போட்டிகளில் 234 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர்.

மேற்குறிப்பிட்டவர்களில் ஹர்ஷ் துபேவின் பெயர் மட்டும் கொஞ்சம் வெளியில் தெரிந்திருக்கும்.
அதுவும், நடந்து முடிந்த ஐ.பி.எல்லில் ஹைதராபாத் அணியில் 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் தெரிந்திருக்கும். மற்றவர்களின் பெயர்கள் வெளியில் பாரவலாகத் தெரிந்திருக்காது.

ஐ.பி.எல் அளவுக்கு ரஞ்சி தொடருக்கு ஊடக வெளிச்சம் இல்லாதது காரணம் என்றாலும், ரஞ்சி தொடரை நடத்தும் பி.சி.சி.ஐ-க்கு இது தெரியாமல் இருக்காது.
அப்படியிருந்தும், இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணிக்கு பேக்அப் வீரர்களாகக் கூட இவர்களில் யாரும் அழைத்துச் செல்லப்படவில்லை.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் டெஸ்ட் அணியில் கருண் நாயரை தேர்வுசெய்திருப்பது உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சயாளர் கவுதம் கம்பீர், கடந்த ரஞ்சி சீசனில் அவரை விடவும் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
இவ்வளவுக்கு மத்தியில் தங்களின் ஆட்டத்தினால், இனியும் தவிர்க்க முடியாது என தேர்வுக்குழுவால் தேர்வுசெய்யப்படும் ஒன்றிரண்டு உள்ளூர் வீரர்களும், பெஞ்சிலேயே அமரவைக்கப்பட்டு திருப்பியனுப்பப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.
அதில் முதல் நபர் மும்மை வீரர் சர்ஃபராஸ் கான். முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 55 போட்டிகளில் ஆடியிருக்கும் சர்ஃபராஸ் கான், 16 சதங்களுடன் 65 ஆவரேஜில் 4,685 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதனால், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
அந்தத் தொடரில், ஒரு இன்னிங்ஸில் 150 ரன்கள் அடித்து தனது திறமையை நிரூபித்தையடுத்து, ஆஸ்திரேலியவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடருக்கும் தேர்வானார்.
ஆனால், 5 போட்டிகளிலும் பென்ச்சிலேயே அமரவைக்கப்பட்ட சர்ஃபராஸ் கான், தற்போது இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார்.
அடுத்து, ரஞ்சி ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியன் என்பவரை பார்டர் கவாஸ்கர் தொடருக்கு தேர்வுக்குழு தேர்வு செய்தது.
முதல் தர கிரிக்கெட்டில் 38 போட்டிகளில் 113 விக்கெட்டுகளும், இரண்டு சதம் உட்பட 1,914 ரன்களும் அடித்திருக்கிறார்.
இவரும் பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதும் பென்ச்சிலேயே அமரவைக்கப்பட்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்வுசெய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட மற்றுமொரு முக்கியமான வீரர் அபிமன்யு ஈஸ்வரன். முதல் தர கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் 48.7 ஆவரேஜில் 27 சதங்களுடன் 7,841 ரன்கள் அடித்திருக்கிறார்.
தற்போது இங்கிலாந்தில் விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக முதல் தர போட்டிகளில் ஆடியிருக்கும் கே.எல். ராகுலை விடவும் கூடுதல் ஆவரேஜில் அதிக ரன்கள் அடித்தவராக அபிமன்யு ஈஸ்வரன் இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடருக்கு இவரும் தேர்வானார்.

ஆனால், அந்தத் தொடரில் ஒரு போட்டியில்கூட களமிறக்கப்படாமல் 5 போட்டிகளிலும் பென்ச்சிலேயே அமரவைக்கப்பட்டார்.
இருப்பினும் ஆறுதலாக இங்கிலாந்துக்கெதிரான தொடரில் தேர்வாகியிருக்கிறார்.
ஆனால், முதல் டெஸ்டில் பென்ச்சில் அமரவைக்கப்பட்டு ஓப்பனிங்கில் ஜெய்ஸ்வாலுடன் சாய் சுதர்சன் களமிறக்கப்பட்டார்.
அப்போதே, ஐ.பி.எல்லில் ஆரஞ்சு கேப் வென்றிருந்தாலும், முதல் தர கிரிக்கெட்டில் சாய் சுதர்சனை விடவும் அதிக ஆவரேஜில் அதிக ரன்கள் குவித்திருக்கும் அபிமன்யு ஈஸ்வரனை ஏன் களமிறக்கவில்லை என எழும் நியாயமான கேள்விகளுக்கு கம்பீர் & கேப்டன் கில்லின் பதில் என்ன?
2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகு இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் ஷர்துல் தாக்கூர்.
2024 டி20 உலகக் கோப்பை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் தொடர், 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய எந்தத் தொடரிலும் இடம்பெறாத ஷர்துல் தாக்கூர், ஐ.பி.எல்லுக்கும் முன்பாக மெகா ஏலத்திலும் அன்சோல்ட் ஆனார்.
கடைசி நேரத்தில் மாற்று வீரராக லக்னோ அணியால் வாங்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், ஓரிரு போட்டிகளில் நன்றாக விளையாடி மொத்தமாக 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இப்போது திடீரென இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் அணிக்கு தேர்வுசெய்யப்பட்டார். இதற்கு, ஏற்கெனவே இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் அவருக்கு இருக்கிறது என்று தேர்வுக்கு குழு கூறுகிறது.
கடைசியாக 2021-ல் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் (ஒரு போட்டி மட்டும் 2022 ஜூலையில் நடத்தப்பட்டது) இந்திய அணியில் ஆடியது.
அந்தத் தொடர் நடந்து 3, 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் இருக்கிறது என்று கூறி, கடந்த ஒன்றரை வருடமாக இந்திய அணியிலேயே விளையாடாத ஷர்துல் தாக்கூரை தேர்வு செய்வது, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகாதா?
அதேபோல், 2024 ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத், கொல்கத்தா அணியில் கவனம் ஈர்த்த நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணாவை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்த தேர்வுக்குழு, இப்போது இங்கிலாந்து தொடருக்கும் தேர்வு செய்திருக்கிறது.
அப்படியென்றால், தாங்கள் நடத்தும் ரஞ்சி போட்டிகளிலிருந்து நல்ல வேகப்பந்துவீச்சாளரையும், ஆல்ரவுண்டரையும் கண்டெடுக்க பிசிசிஐ-க்கு நேரமில்லையா?
ஒவ்வொரு ஐ.பி.எல் தொடருக்கு முன்பும் அந்தந்த அணி நிர்வாகம் உள்ளூர் டி20 லீக்குகளில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களைக் கண்காணித்து ஏலத்தில் எடுக்கிறது.

டெஸ்ட் போட்டிக்கென்றே முதல் தர போட்டிகளில் தயாராகிக்கொண்டிருக்கும் வீரர்களை, டி20 போட்டிகளுக்கு ஒருபோதும் ஐபிஎல் அணிகள் கண்டுகொள்ளாது.
ஆனால், பி.சி.சி.ஐ மட்டும் ஐ.பி.எல்லில் கவனம் ஈர்க்கும் வீரர்களை டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்கிறது.
குறுகிய வடிமான டி20 போட்டி ஆடும் வீரர்களின் ஆட்டமும், நாள் முழுக்க பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஈடுபடக்கூடிய முதல் தர போட்டிகளின் வீரர்களின் ஆட்டமும் எப்படி ஒன்றாக இருக்கும்.
அப்படியிருக்கும்போது டெஸ்ட் அணிக்கு டி20 போட்டிகளிலிருந்து வீரர்களைத் தேர்வுசெய்வது முற்றிலும் முரண்.
ஐ.பி.எல்லில் கவனம் ஈர்த்த நிதிஷ் குமார் ரெட்டி பார்டர் கவாஸ்கர் தொடரில் நன்றாகத்தானே விளையாடினார், அவரைத் தேர்வு செய்ததில் என்ன தவறு என்று கேள்விகள் எழலாம்.
ஆனால், ஒருவருக்கு வாய்ப்பளித்து அதில் அவர் நன்றாகச் செயல்படுவதற்கும், குறிப்பிட்ட ஃபார்மெட்டுக்காக தயாராகும் ஒரு வீரர் தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பே கிடைக்காமல் புறக்கணிக்கப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இப்போது, ஐ.பி.எல்லால் வாய்ப்பு கிடைத்த வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றாலும்கூட (அனைவரின் விருப்பமும் அதுதான்), உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ரெக்கார்ட் வைத்துக்கொண்டு வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்கள் புறக்கணிப்படுவதை, பி.சி.சி.ஐ எந்தக் காரணம் கூறி சமாளித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, இனிவரும் தொடர்களிலாவது அந்தந்த ஃபார்மெட்டுக்குரிய உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களை எப்போதும் தங்களின் ரேடாரில் வைத்து பி.சி.சி.ஐ தேர்வுசெய்ய வேண்டும்.