
புதுடெல்லி: நாடு முழுவதும் 2.45 லட்சம் பழைய வாகனங்கள் ஸ்க்ராப் (Scrap) செய்து அழிக்கப்பட்டுள்ளன. பழைய வாகனங்கள் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தால் பல்வேறு பலன்கள் கிடைத்துள்ளன.
அதிகமான மாசு மற்றும் சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்ட பழைய வாகனங்கள் குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய அரசு பழைய வாகனங்கள் தொடர்பான கொள்கையை கடந்த 2021 ஆக.13-ல் வெளியிட்டது. இதன்படி, 10 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த தடை டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை 2.45 லட்சம் பழைய வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.