• June 25, 2025
  • NewsEditor
  • 0

“போர் என்பது தவறானது, காசாவில் உள்ள குழந்தைகளை பார்க்கும்போது மிகுந்த கவலையாக இருக்கிறது இப்போதெல்லாம் கடவுள் எங்கே போனார் என கேட்கும் அளவிற்கு மனநிலை உள்ளது..” என்று இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

மார்கன் திரைப்பட புரமோஷன் விழாவிற்கு நடிகை ப்ரித்திகா, சகோதரியின் மகன் அஜய் திஷன் ஆகியோருடன் விஜய் ஆண்டனி மதுரைக்கு வருகை தந்தார்.

விஜய் ஆண்டனி

காந்தாரோ போல பிரமாண்ட கிராமத்து கதை..

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, “மார்கன் படத்தின் இயக்குநர் லியோ ஜான்பால் அட்டகத்தி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சூது கவ்வும் ஆகிய படங்களின் விஷுவல் எடிட்டராக பணிபுரிந்தவர். இந்நிலையில்தான் எனக்கு ஒரு கதை சொன்னார். எடிட்டரை ஏன் ஒரு இயக்குநராக மாற்றக்கூடாது என நினைத்து வாய்ப்பு அளித்தேன். மார்கன் படம் நன்றாக வந்துள்ளது, அனைவருக்கும் பிடிக்கும்” என்றவரிடம்,

“கிராமம் சார்ந்த கதைகளில் ஏன் நடிப்பதில்லை?” என்ற கேள்விக்கு,

“விரைவில் அது போன்ற படம் வரும், ஏற்கெனவே அண்ணாதுரை, காளி போன்ற படத்தில் நடித்தேன். எப்படி காந்தாரோ வந்ததோ அதேபோன்று ஒரு கிராமத்து கதையை பிரமாண்டமாக பான் இந்தியா படமாக எடுக்கவுள்ளேன், அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது, விரைவில் சூட்டிங் தொடங்கும், டைட்டில் இன்னும் வைக்கவில்லை” என்றார்.

10 நாள்கள் ஓடினாலும் வெற்றிதான்..

“தற்போது ஒரு வாரம் படம் ஓடினாலே சக்சஸ் என கூறுகிறார்களே” என்றதற்கு,

“முந்தைய காலங்களில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேர் படம் பார்ப்பார்கள், தற்போது 20 லட்சம் பேர் ஒரே நாளில் படம் பார்க்கிறார்கள், அப்போது 100 நாள்கள் ஓடுகின்ற படங்கள் தற்போது அதிக அளவு திரையரங்குகளில் வெளியாவதால் 10 நாள்கள் ஓடினாலே பொருளாதார ரீதியாக வெற்றிதான். அப்போது திரையரங்குகள் மட்டும் இருந்தது, தற்பொழுது சேட்டிலைட், டிஜிட்டல் இருப்பதால் ஒருவாரம் ஓடினாலே சக்சஸ்தான்” என்றார்.

“நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி கைதாகிறார்களே” என்றதற்கு,

“உலகம் கண்டுபிடித்த காலத்திலிருந்தே போதைப்பொருள் உள்ளது. சிகரெட் பிடிப்பதின் அடுத்த வெர்சன்தான் போதைப்பொருள்.”

மார்கன்

அரசியலில் குதிக்க முடியாது

“மீண்டும் இசையமைக்க உள்ளீர்களா” என்றதற்கு

“10 ஆண்டுகளாக இடைவெளி விட்டு மீண்டும் இசையமைக்க உள்ளேன். விஜய் ஆண்டனிக்கு சில படங்கள்தான் செட் ஆகும், ஓப்பனிங் சாங் ஆட முடியாது அனுஷ்காவுடன் டூயட் பாட முடியாது இதையெல்லாம் பாடுவதற்கு பெரிய ஸ்டார்களால் மட்டும் தான் முடியும். மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரிக்கவும், இல்லையென்றால் இசை அமைக்கலாம் என முடிவிலும் உள்ளேன்” என்றவரிடம்

“அரசியலுக்கு வருவீர்களா?” என்றதற்கு?

“அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை, அதற்கான அறிவு என்னிடம் இல்லை. 50 வயது ஆகிவிட்டது வட்டம், மாவட்டம் என அரசியல் பறறி எதுவும் தெரியாது, மக்களை சந்தித்து புரிந்து கொள்ள வேண்டும், FRAME இருக்குது என்பதற்காக அரசியலில் குதிக்க முடியாது” என்றவர்..

பிச்சைக்காரன் – டைட்டில் ஏன்?

“உங்களுடைய படங்களின் டைட்டில் வித்தியாசமாக இருப்பது எப்படி? என்றதற்கு,

“பணக்காரன்னு எல்லாரும் வைத்துக்கொள்கிறார்கள். பிச்சைக்காரனா யாரும் கண்டுக்கறது இல்லை என்பதால்தான் அந்த பெயர் வைக்கப்பட்டது. நான் செண்டிமெண்ட் பார்ப்பது கிடையாது, ராகு, கேது, நல்லது, கெட்டது என எதுவும் எனக்கு கிடையாது வேலை மட்டும் தான், மனசு மட்டும் தான் எனவே இந்த விஷயங்களை நான் நம்பாததால் எனக்கு இது போன்ற டைட்டில்கள் கிடைக்கிறது. படத்துக்கான டைட்டில் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என நினைப்பேன்.” என்றார்.

இஸ்ரேல்- ஈரான் போர்:

“இஸ்ரேல்- ஈரான் போர் குறித்த கேள்விக்கு,

“போர் என்பது யார் செய்தாலும் தவறுதான். உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து போர் என்று அறிவித்து விடுகிறார்கள், ஆனால் இறப்பது பொதுமக்கள் தான். காசா குழந்தைகளை பார்க்கும்போது மிகுந்த கவலையாக இருக்கிறது, இப்போதெல்லாம் கடவுள் எங்கே போனார் என கேட்கும் மனநிலை வந்து விடுகிறது. போர் நடக்க வேண்டாம் என்பதே என் ஆசை.” என்றவர்,

விஜய் ஆன்டணி

மதுரை சாப்பாடு

“மதுரையின் சாப்பாடு ரொம்ப பிடிக்கும், மதுரை மக்களின் அன்பும் இயல்பும் பிடிக்கும், பேரன்பும் பெரும் கோபமும் கொண்ட இயல்பான அன்பான மதுரை மக்கள், சென்னையை விட உணவு பொருள்கள் 5 மடங்கு குறைவான விலையில் கிடைக்கும். கள்ளழகர் சித்திரை திருவிழாவுக்கு உற்சாகமான பாடல் ஒன்றை உருவாக்குவேன்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *