
வேலூர் மாவட்டத்திலுள்ள ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியானது மேல் அரசம்பட்டு, பீஞ்சமந்தை போன்ற மலை கிராமங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்த ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியில் இருந்து தினந்தோறும் வேலூர், சென்னை, குடியாத்தம், ஆம்பூர் உள்ளிட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்தப் பகுதியில் புதிதாக ஒரு பேருந்து நிலைய நிழற்கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டு CGF திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலைய நிழற்கூடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்டு 5 வருடங்களாகியும் ஒடுகத்தூர் பேருந்து நிலைய நிழற்கூடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இது குறித்து விகடன் தளத்தில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அந்த செய்தி கட்டுரையில், பேருந்து வந்து செல்வதற்கான போதிய இடவசதி இல்லாத காரணத்தினாலும், பாதை குறுகி இருப்பதினாலும் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலைய நிழற்கூடம் அருகே பேருந்து வருவது இல்லை. இதனால் பொது மக்களும், பயணிகளும் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலைய நிழற்கூடத்தை பயன்படுத்துவதில்லை என்று குறிப்பிட்டு இருந்தோம். இது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது, “புதிதாக பேருந்து நிலைய நிழற்கூடம் கட்டப்பட்டிருந்தாலும் அது சரியான இடத்தில் கட்டப்படவில்லை. இந்த இடத்திற்கு பேருந்துகள் வந்து செல்வதில்லை. பேருந்து வந்து செல்லும் அளவிற்கு போதுமான இடவசதியும் இங்கு இல்லை. அதனால் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்புகின்றன.
இதனால் பொதுமக்களும் பயணிகளும் இங்கு வருவதில்லை. இந்த பேருந்து நிலைய நிழற் கூடம் அருகே பேருந்து நிற்க வேண்டிய இடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நிற்கின்றன. எனவே பேருந்திற்காக வெயிலிலும் மழையிலும் பழைய பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிய பேருந்து நிலைய நிழற்கூடத்திற்கு பேருந்துகள் வரும் அளவிற்கு சரியான இடவசதி மற்றும் பாதையை ஏற்படுத்தி தர வேண்டும்” என்று கூறினர்.
இது குறித்து ஒடுகத்தூர் பேரூராட்சி நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, “ஒடுகத்தூரில் கட்டப்பட்ட பேருந்து நிலைய நிழற் கூடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கிறோம். மேலும் பேருந்துகள் வந்து செல்ல சாலை வசதியையும் மேம்படுத்த உள்ளோம். இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.




அதன்படி தற்போது விகடன் செய்தி எதிரொலியாக பேருந்து வந்து செல்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து வந்து செல்வதற்கு இடைஞ்சலாக இருந்த பேரூராட்சிக்கு சொந்தமான பழைய கட்டடங்களை இடித்து அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பேருந்துகள் அனைத்தும் ஒடுகத்தூர் புதிய பேருந்து நிலைய நிழற் கூடம் அருகே வந்து செல்கின்றன. முன்பு ஆட்டோக்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் தற்பொழுது பேருந்துகள் நின்று கொண்டிருக்கின்றன. பயணிகளே இல்லாமல் வெறும் வாகன நிறுத்தும் இடமாக இருந்த அந்த பகுதி தற்போது பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியாக மாறி உள்ளது.