சில நாள்களுக்கு முன்பு, மதுரைக்கு பயணம் மேற்கொண்டிருந்த திருமாவளவன், கோவிலில் வைத்துவிட்ட திருநீரை அழித்தது சர்ச்சையானது. இதை முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை மேற்கோள் காட்டி பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதாவது…
“தர்கா போகிறேன். அங்கே தொப்பி அணிவிக்கிறார்கள். அதை நான் கொஞ்ச நேரத்தில் கழற்றிவிடுவேன். அது அவர்களுக்கும் தெரியும்.
அதே மாதிரி நானே கோவிலுக்கு சென்றேன். அங்கே பூசாரி எனக்கு திருநீரை பூசினார். அவருடைய உணர்வை மதித்து திருநீர் வைத்துக்கொண்டேன். அதை அப்படியேவா வைத்துக்கொள்ள முடியும்? அதனால், அழித்தேன்.
புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று திருநீரை வைத்துக்கொள்ளவில்லை. அவமதிக்க வேண்டும் என்று அதை அழிக்கவில்லை.
இது அந்த அற்பர்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்களுக்கு அரசியல் தெரியாது.
100 ஆண்டுக்காலம் வாழ ஆசையில்லை!
என்னை இன்றும் அன்பின் பெயரில் பல கோவில்களுக்கு அழைக்கிறார்கள். நான் போகிறேன். அங்கே கலசத்தில் தண்ணீர் ஊற்ற சொல்கிறார்கள். செய்கிறேன். இது எல்லாம் 100 ஆண்டுக்காலம் வாழ வேண்டும் என்ற ஆசையில் செய்யவில்லை.
நான் வீட்டுக்கு செல்லும்போது என் தாய் எனக்கு திருநீறு பூசுகிறார். அதை நான் ஏற்றுகொள்கிறேன். என் தாயை எப்படி மதிக்கிறேனோ, அப்படி என் மக்களையும் மதிக்கிறேன். அது நான் மக்கள் மீதும், அவர்கள் நம்பிக்கை மீதும் நான் செலுத்தும் மதிப்பு.
இந்து மதத்தை ஏன் அரசியலமைப்பு அரசு மதமாக ஏற்கவில்லை?
இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டமே கூறுகிறது. அதனால் தான், இந்து மதத்தை அரசு மதமாக அது ஏற்றுக்கொள்ளவில்லை. இந்து சமயத்தில் சகோதரத்துவம் இல்லை… சமத்துவம் இல்லை. ஆனால், பாகுபாடு இருக்கிறது.
இந்து மதம் ஏன் சகோதரத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மோகன் பகவத், மோடி, அமித்ஷா என ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த யாராவது ஒருவர் சொல்வார்களா?

நீங்கள் என்னை சங்கராச்சாரியார் ஆக்கவேண்டாம். உங்களுடைய சகோதரனாக ஆக்குங்கள் என்று தான் கூறுகிறேன். ஆனால், நீங்கள் என்னை இந்து என்கிற பெயரிலும் முருக பக்தர் என்கிற பெயரிலும் ஏய்க்கப் பார்க்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் முருகன் பக்தர்களை விட, ஐயப்பன் பக்தன் அதிகம் இருக்கிறார்கள்.
சிவனும் தமிழன் தான்!
ஐவகை நிலத்தின் குறிஞ்சி நிலத் தலைவன் முருகன். அவன் எங்களைப் போல பிறந்தார்… எங்களைப் போல வளர்ந்தார்… எங்களைப் போல மக்களை வழிநடத்தினார். இது தான் எங்களுடைய இலக்கியங்கள் கூறுகின்றன. இவன் புராணக் கதைகளில் வருபவன் அல்ல.
அவனை சுப்பிரமணியன் ஆக்கிவிட்டார்கள். எந்தப் பிராமணர்களும் தங்களது பிள்ளைக்கு முருகன் என்று பெயர் வைக்கமாட்டார்கள். ஒருவேளை வைத்தாலும் ஸ்கந்தன் என்று தான் வைப்பார்கள். இது வடமொழி.
அவர்கள் சொல்கிற சுப்பிரமணியன் நாம் சொல்லும் முருகன் அல்ல. தமிழ்நாட்டை தவிர, அவருக்கு வேறு எங்கும் அறுபடை வீடு கிடையாது.
முருகன் தமிழ் கடவுள் என்றால், அவருடைய தாய், தந்தை இருவரும் தமிழர்கள் தானே. அப்போது கைலாயம் தமிழர்களின் தேசம் தானே. அப்போது இந்தியா முழுவதும் தமிழர்களுடையது தானே.
எங்கள் தமிழன் சிவபெருமான் தமிழன் என்றால் இமயமலை முதல் கன்னியாகுமரி வரை தமிழர் வாழ்ந்தார் என்பதற்கு அந்தக் கதைப் படி சான்று.

அப்போது ஏன் கணேசன் தமிழர் இல்லை? எங்களுடைய வரலாறுகளையும், அடையாளங்களையும் நீங்கள் மாற்றி, அதற்கு புது அர்த்தங்கள் கொடுத்து என்னை ஏய்க்கிறீர்கள். இதன் மூலம் எங்களைப் பாகுபடுத்தி, சீரழிப்பதை அம்பேத்கர் பிள்ளையாக, பெரியார் பிள்ளையாக இருந்துகொண்டு எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனக்கு தேர்தல் அரசியலில் விருப்பமில்லை என்று…
நாங்கள் இயக்கம் கண்டது நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் சீட்டு பேரம் பேசுவதற்காக அல்ல. நான் திடீரென்று தேர்தல் பாதையே வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். இந்த நிலைபாட்டை ஏற்று, என் பின்னால் வருபவர்கள் வாருங்கள் என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்.
சீட்டு, நோட்டு, பிளாஸ்டிக் சேருக்காக என்று இவர்கள் எங்களை சராசரியாக எடைப் போடுகிறார்கள். எனக்கு பிளாஸ்டிக் சேர், சோபா அனைத்தும் ஒன்று தான்.
சோபாவில் அமர்வது தான் கெத்து என்று நினைப்பவன் அல்ல நான். எனக்கு அப்படியான மதிப்பீடு கிடையாது. அவர்களுக்கு தான் உண்டு.
இந்திய அரசியலமைப்பு இந்து மதத்தை அரச மதமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான், அது மதச்சார்பின்மையாக திகழ்கிறது” என்று கூறியுள்ளார்.