
Doctor Vikatan: என் வயது 18. என்னுடன் படிக்கும் பலரும் பார்லர் சென்று ஃபேஷியல், ப்ளீச் போன்ற சிகிச்சைகளைச் செய்து கொள்கிறார்கள். ஆனால், என் வீட்டில் அதற்கெல்லாம் அனுமதி இல்லை. ‘மஞ்சள் தேய்ச்சுக் குளி, ஃபேஷியல் தராத பளபளப்பை அது தரும்’ என்கிறார் அம்மா. அவர் சொல்வது எந்த அளவுக்கு உண்மை. ஃபேஷியலுக்கு பதிலாக மஞ்சள் தேய்த்துக் குளிப்பது மட்டுமே சருமத்தை அழகாக்குமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.
மஞ்சளுக்கும் சந்தனத்துக்கும் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை உண்டு. ‘அந்தக் காலத்துல மஞ்சள் யூஸ் பண்ணலையா’ என்று பலரும் கேட்கலாம். முன்பு இந்த அளவுக்கு சூழல் மாசு இல்லை. இன்று சூழல் மாசு அதிகரித்திருக்கிறது. காலநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் மஞ்சள் தேய்த்துக் குளித்துவிட்டு வெயிலில் சென்று வந்தால், சருமம் கறுத்துப்போவதற்கான வாய்ப்பு முன்பைவிட 10 மடங்கு அதிகம்.
மஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் இருப்பதை மறுப்பதற்கில்லை. மஞ்சளை உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும்போது அதிலுள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள், மஞ்சளின் முழுப்பலனும் கிடைக்கும். மஞ்சளுடன் துளி மிளகுத்தூளும் சேர்த்து எடுத்துக்கொள்வது இன்னும் சிறப்பு. எனவே, உள்ளுக்கு சாப்பிடக்கூடிய பொருளாக இருக்கும்பட்சத்தில், அதை வெளிப்பூச்சாக உபயோகிப்பதைவிட, சாப்பிடுவதன் மூலம் அதன் முழுப் பலனையும் பெற முடியும்.
இயற்கையான பொருள் எதுவானாலும் அதற்கு குறிப்பிட்ட அளவு புராசஸிங் தேவை. உதாரணத்துக்கு, எலுமிச்சைப்பழத்தில் நிறைய வைட்டமின் சி சத்து உள்ளது. அதற்காக அதை நேரடியாக சருமத்தில் தேய்த்தால் எரிச்சல் உணர்வு வரும். அதுவே அதை புராசெஸ் செய்து, வைட்டமின் சி சீரமாக உபயோகிக்கும்போது, சருமத்தின் உள்ளே முழுமையாக ஊடுருவும், எரிச்சலும் இருக்காது. ரோஜா இதழ்கள், பயத்தமாவு, மஞ்சள் என எல்லாமே இப்படித்தான். இயற்கையான இவையெல்லாம் சருமத்துக்கு நல்லது என நினைத்து உபயோகிக்கும்போது, அவற்றின் கொரகொர தன்மையால் சருமத்தில் உராய்வு ஏற்பட்டு, எரிச்சல், அரிப்பெல்லாம் ஏற்படும் என்பதால் இவற்றை நேரடியாக சருமத்தில் உபயோகிப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது.

சருமத்திலுள்ள செல்கள் 14 நாள்களுக்கொரு முறை உதிர்ந்து புதிதாக உருவாகும். வயதாக, ஆக இந்தச் செயல் சற்று மந்தமாகும். அந்நிலையில் இறந்த செல்களை அகற்ற ஃபேஷியல் உதவும். ஆனால், மருத்துவர்களிடம் ஃபேஷியல் செய்துகொள்வது பாதுகாப்பானது. பார்லர்களில் என்ன பிராண்ட் உபயோகிக்கிறார்கள், வாடிக்கையாளரின் சருமத்தின் தன்மையை செக் செய்து அதற்கேற்ற பொருளை வைத்து ஃபேஷியல் செய்கிறார்களா என்பது கேள்விக்குறியே.
ஃபேஷியல் செய்வது ஜிம்முக்கு செல்வது போன்றதுதான். ஜிம் போன அடுத்த நாளே உடலில் வித்தியாசம் தெரிந்துவிடாது, ஃபேஷியலும் அப்படித்தான். 15 நாள்களுக்கொரு முறை ஃபேஷியல் செய்து கொள்ளலாம். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் மாதம் ஒருமுறை செய்து கொள்ளலாம். சருமத்துக்கான எந்த அழகு சிகிச்சையையும் 18 வயதுக்குப் பிறகே தொடங்க வேண்டும். அதுவரை மாய்ஸ்ச்சரைசரும் சன் ஸ்கிரீனும் மட்டுமே போதும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.