• June 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி விருது வழங்கும் விழாவில், நடிகர் சத்யராஜ்க்கு பெரியர் ஒளி விருதை வழங்கினார் திருமாவளவன்.

“விசிக மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 50,000 வழங்குவேன்”

விருதை ஏற்றுக்கொண்டு பேசிய சத்யராஜ், “பெரியார் படத்தில் நான் சம்பளம் வாங்காமல் நடித்ததற்காக அந்த படத்தின் 100வது நாள் விழாவில் பெரியார் கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் அணிந்திருந்த மோதிரத்தை ஆசிரியர் வீரமணி வழங்கினார். இதேப்போல எம்.ஜி.ஆரிடம் கர்லாகட்டை வாங்கினேன். இன்னைக்கு அன்புத் தம்பியிடம் 50,000 ரூபாய் செக் வாங்கியிருக்கிறேன்.

இதில் 49,500 ரூபாயை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு வழங்குகிறேன். ஒரு 500 ரூபாய் நோட்டை, தம்பி நினைவாக வன்னியரசுவும் பாவலனும் எனக்கு திருமாவின் புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஃப்ரேம் போட்டு தர வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் இதேப்போல 50,000 ரூபாய் விசிகவின் ஏழை மாணவர்களுக்கு ‘உரிமைத் தொகையாக’ வழங்குகிறேன்.” என்றார்.

விசிக விருதுகள் 2025

தோள்மீது கைபோடுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்…

மேலும், “நமக்கு கடவுள் இருக்காரா இல்லையா என்பது பிரச்னையே இல்லை. சாதி ஒழிப்பும் தமிழ் தேசியமும்தான் நம் பிரச்னைகள்.” என்றார். இதற்கு திருமாவளவன் எழுந்து நின்று கைதட்டினார்.

உரக்கப் பேசத் தொடங்கிய சத்யராஜ், “சாதியை வைத்துக்கொண்டு தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும்? ஆணவக் கொலைகள் எப்படி நடக்கிறது? ஜப்பான்காரன், சீனாகாரன் வந்து வெட்டுகிறாரானா? தமிழன் தானே இன்னொரு தமிழனை வெட்டுரான். சாதி ஒழிந்தால்தான் தமிழ் தேசியம் வளரும். அதுதான் நமக்கு முக்கியமான கொள்கை.

சாதியை சொல்லி அடங்க சொன்னால் அடங்க மறுப்போம்; அத்துமீறுவோம்… இப்போது அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் என எல்லோரும் தோள்மீது கைபோடும் நிலைமை வந்துவிட்டது. ஆனால் எதற்காக தோள்மீது கைபோடுகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.” என்றவர் எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றைப் பாடினார்.

அம்பேத்கர் ஈரோட்டில் பிறந்திருந்தால்…

1990 விசிக மதுரையில் ஆரம்பிக்கப்பட்டபோது பெரியார் படத்தைப் போட்டு, பெரியாரையும் அம்பேத்கரையும் ஒன்றிணைத்தது தம்பி(திருமா)தான். இனி நமக்குள் அந்த பிரிவினை இருக்கக் கூடாது.

மார்க்ஸ் மகாராஷ்டிராவில் பிறந்திருந்தால் அம்பேத்கராக இருந்திருப்பார், அம்பேத்கர் ஈரோட்டில் பிறந்திருந்தால் பெரியாராக இருந்திருப்பார், பெரியார் ஜெர்மனில் பிறந்திருந்தால் மார்க்ஸாக இருந்திருப்பார். சூழ்நிலைதான் தலைவர்களை உருவாக்கியது.

இங்கிலாந்தில் அம்பேத்கர் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தம்பி திருமாவைப் பற்றி இல்லூசிவ் டெமோக்ரசி என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றனர். இவரை ஏன் நாம் வாழும் அம்பேத்கர் எனச் சொல்லக் கூடாது?

தம்பி திருமவளவன் மட்டுமல்ல, விடுதலைச் சிறுத்தைகளின் ஒவ்வொரு தொண்டரும் என்னை வழிநடத்துகின்றனர்.” என்று பேசினார்.

விசிக விருதுகள் 2025
விசிக விருதுகள் 2025

முருகர் மாநாட்டை வைத்து ஏமாற்ற முடியாது!

மேலும் அவர், “பெரியாருக்கு கடவுள் இருப்பது இல்லாமல் இருப்பது பிரச்னை இல்லை. அவரைப் பொறுத்தவரை சாதி ஒழியணும். அதற்கு தடையாக இருப்பதால் கடவுள் என்ற கற்பிதத்தை எதிர்க்கிறார்.

அது ஒரு ஆளாக இருந்தால் எதிர்க்கலாம். அது ஒரு உருவகப்படுத்தப்பட்ட மாயமான கற்பனை. அதை முதலில் எடுத்தால்தான் முடியும். அதை வைத்துதான் எல்லா வித்தையும் காட்டுகிறார்கள். ஆனால் அவற்றை தமிழ்நாட்டுக்குள் காட்ட முடியாது.

நாங்கள் கோவிலுக்கு போவோம், பிரசாதமெல்லாம் வாங்கி சாப்பிடுவோம். வெளியே வந்து சாதி மறுப்பும் தமிழ் தேசியமும் பேசுவோம். தயவு செய்து (கடவுளை வைத்து) எங்களை ஏமாற்றுவதாக நினைத்து, எங்களிடம் நீங்கள் ஏமாறாதீர்கள். பார்த்தால் பாவமாக இருக்கிறது.

நீங்கள் முருகர் மாநாடு நடத்தி இவர்களை ஏமாற்றிவிட்டோம் என நினைக்காதீர்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, இருந்தலும் முருகர் எங்க ஆளு; சைலண்டாக நின்றுவிட்டு உனக்கு ஆப்பு வைத்துவிடுவார்.

இன்னைக்கு தமிழ்நாடு இந்த அளவு முன்னேறியிருப்பதற்கு பெரியாரின் சிந்தனைகளும் அம்பேத்கரின் சிந்தனைகளும்தான் காரணம். பெரியார் பொருளதாரத்தின் தனது கொள்கை கம்யூனிசம்தான் என்றார். ஆனால் சாதி ஒழிய வேண்டுமா, ஏழை – பணக்காரன் வித்தியசம் ஒழிய வேண்டுமா எனக் கேட்டால் சாதிதான் முதலில் ஒழிய வேண்டுமென்பார்… பெரியார், அம்பேத்கர், மார்க்ஸிய செயல்படு திருமாவளவனுக்கும் விசிகவினருக்கும் நன்றிசொல்லிக்கொள்கிறேன்” எனப் பேசியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *