
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வெளியான வீடியோ சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். அறிஞர் அண்ணாவின் மாற்றான் தோட்ட மல்லிகைக்கும் மனமுண்டு எனும் கூற்றின் அடிப்படையிலும், முருக பக்தர்கள் என்ற அடிப்படையில்தான் மாநாட்டில் பங்கேற்றோம். அதில் அரசியல் இருக்காது என்று நம்பினோம்.
மாநாட்டில் ஒளிப்பரப்பட்ட வீடியோவில் பெரியார், அண்ணாவை அவதூறு செய்ததாகத் தகவல் வந்துள்ளது. அ.தி.மு.க ஒரு நாளும் கொள்கையை, கோட்பாட்டை, லட்சியத்தை விட்டுக் கொடுக்காது.
அண்ணாவை, ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதற்காகக் கடந்த காலத்தில் என்ன முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தி.மு.க போல எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு ஆட்சி அதிகாரத்தை எடப்பாடி பழனிச்சாமி தக்க வைக்க மாட்டார். பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருந்த போது மக்களுக்குத் தேவையான திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி கேட்டுப் பெற்றுத் தந்துள்ளார்.
தற்போது மக்கள் நலனுக்காக பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை.

நாங்கள் அந்த வீடியோ ஒளிப்பரப்பட்டதைப் பார்க்கவில்லை. திரைக்குப் பின்புறம் அமர்ந்து இருந்ததால் பார்க்க முடியவில்லை. பெரியார், அண்ணா குறித்த அவதூறு கருத்துக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டின் தீர்மானம், உறுதிமொழிகளை அ.தி.மு.க ஒரு போதும் ஏற்காது” என்று கூறியிருக்கிறார்.