• June 24, 2025
  • NewsEditor
  • 0

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகிலுள்ள கரைசுத்துப்புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார். இவர், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், 4-ம் தேதி அவரது வீட்டிற்குப் பின்புறமுள்ள தோட்டத்தில் கை, கால்கள் கம்பியால் கட்டப்பட்டு உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மர்ம மரணம் குறித்து 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸார் விசாரணை

இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத சூழலில் இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. ஜெயக்குமார் கைப்பட எழுதியதாக கூறப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், தொழிலதிபர்கள், நண்பர்களிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டது.  அந்தப் பகுதியிலுள்ள செல்போன் டவர்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் பதிவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த எண்கள் அனைத்தையும் போலீஸார் ஆய்வுக்கு உட்படுத்தி வந்தனர். இந்தநிலையில் சம்பவம் நடந்த அன்று திசையன்விளையிலுள்ள ஒருகடைக்கு வந்து சென்றதால் அதுதொடர்பாக கடையின் உரிமையாளர், மேலாளர், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதற்கிடையில் உவரி, குட்டம், சுரைசுத்துப் புதூர்ஆகிய பகுதிகளிலுள்ள செல்போன் டவர்களில் இருந்து வந்த அழைப்புகள் குறித்து இரண்டாவது முறையாக விசாரணை நடத்தினர். மேலும், ஜெயக்குமார் அடிக்கடி வந்து செல்லும் ஹோட்டல்கள், டீக்கடைகள், பெட்டிக் கடைகளுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

ஜெயக்குமார் எழுதிய கடிதம்

ஆனாலும் சரியான முகாந்திரம் கிடைக்கவில்லை. இவ்வழக்கில் விஞ்ஞானப் பூர்வமாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரைசுத்துப்புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட கல்விளை என்ற கிராமத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் வைத்து 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 400 நாள்களுக்கு மேல் ஆகியும் முடிவு எட்டப்படாததால் திணறி வருகிறார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *