• June 24, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் நேற்று மாலை சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே உள்ள சேவப்பநாயக்கன்வாரி பகுதியை, சேர்ந்தவர் தெய்வபாலன் (54). இவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) பணியாற்றி வந்தார்.

உயிரிழந்த தெய்வபாலன்

இக்கூட்டத்தில் தெய்வபாலன் கலந்துக்கொண்டார். அப்போது, தெய்வபாலன் தனக்கு உள்ளுக்குள் ஏதோ செய்கிறது, தண்ணீர் குடிக்க வேண்டும் என்றவர் தரைதளத்திற்கு இறங்கி வந்துள்ளார். அவருடன் சக ஊழியர்கள் சிலரும் வந்துள்ளனர். தண்ணீர் குடித்த தெய்வபாலன் போர்டிகோ படியில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்துள்ளார். பின்னர் மீண்டும் அவரை முதல் தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் அவரை காரில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காரில் செல்லும் போதே நெஞ்சு பகுதி மற்றும் முதுகிலும் அழுத்தியுள்ளனர் ஆனால் தெய்வபாலனிடம் எவ்வித அசைவும் இல்லை. தெய்வபாலனை பரிசோதித்த டாக்டர்கள் நெஞ்சு வலி ஏற்பட்டு ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நெஞ்சு வலி (சித்திரிப்பு படம்)

இது குறித்து அரசு அலுவலர்கள் சிலரிடம் பேசினோம், “அரசு அலுவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலான அலுவலர்கள் மன உளைச்சல் அடைவதாக சொல்லப்படுகிறது.

நேர்முக உதவியாளரான தெய்வபாலனும் பணி சுமை இருப்பதாக சக அலுவலர்களிடத்தில் பேசி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தெய்வபாலன் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்திருக்கிறார். நான்கு மணி வரை எல்லோருடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தவரின் உடல் 5 மணியளவில் உடற்கூறாய்வுக்காக மார்ச்சுவரியில் கிடத்தப்பட்டு கிடந்ததை யாராலும் நம்ப முடியவில்லை” என்று சக ஊழியர்கள் புலம்பினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *