
“திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் திருப்பரங்குன்றத்திற்கு புறப்படுவதால் ஜூலை 14 ஆம் தேதி மீனாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக இணை ஆணையர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் குடமுழுக்குப் பெருவிழா வருகிற ஜூலை 14 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.
குடமுழுக்கு விழாவிற்காக மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் ஜூலை 13 -ஆம் தேதி நள்ளிரவு திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளுவதால் 13 ஆம் தேதி மாலை 6 மணி வரை மட்டும் பக்தர்கள் மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
அதன்பின்னர் திருக்கோயிலில் பூஜைகள் நடைபெற்று அன்றைய தினம் இரவு 10 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி, 14 ஆம் தேதி அதிகாலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சென்று அங்கு நடைபெறும் குடமுழுக்கு விழாவில் எழுந்தருளி மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் கோயிலிலிருந்து புறப்பாடாகி நள்ளிரவு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வந்து சேர்த்தியாவார்கள்.

எனவே, 14.07.2025 ஆம் தேதி திங்கட்கிழமை முழுவதும் இத்திருக்கோயிலின் நடை சாத்தப்பட்டிருக்கும். மேலும் 13.07.2025 -ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் மறுநாள் 14.07.2025-ஆம் தேதி முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், பக்தர்களின் வசதிக்காக 13.07.2025-ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் மற்றும் 14.07.2025-ஆம் தேதி முழுவதும் தற்போது வழக்கத்தில் உள்ளபடி கலைக்கூடத்திற்கும் (ஆயிரங்கால் மண்டபம்) மற்றும் அன்னதானத்திற்கும் அத்துடன் அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களுக்கு அருள்மிகு வன்னிமரத்தடி விநாயகர் திருக்கோயிலுக்கும் பக்தர்களை ஆடி வீதிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் 15.07.2025 ஆம் தேதி வழக்கம் போல் அதிகாலை முதல் பக்தர்கள் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.