
தமிழகத்தில் கடைசியாக நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க 173 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 25, ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம்க்கு தலா 6 இடங்கள் வழங்கப்பட்டன. முஸ்லீம் லீக், கொ.ம.தே.க-வுக்கு தலா 3, ம.ம.க-வுக்கு 2, த.வா.க, பார்வார்டு பிளாக், மக்கள் விடுதலைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவைக்கு தலா ஒரு இடமும் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்தலின் முடிவில் தி.மு.க கூட்டணி, ஆட்சியைப் பிடித்தது. அவ்வப்போது தோழமை கட்சிகளுடன் சிறுசிறு முரண் ஏற்பட்டாலும் தி.மு.க கூட்டணி பலமாகவே இருந்து வருகிறது.
சமீபத்தில் மதுரையில் நடந்த தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் மைக் பிடித்த முதல்வர் ஸ்டாலின், ‘தி.மு.க தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று நமது கூட்டணி. ஒரு கூட்டணி இத்தனை காலத்துக்குத் தொடர்ந்ததாகவே தமிழ்நாட்டில் வரலாறு இல்லை’ எனப் பெருமிதம் பொங்கப் பேசியிருந்தார். ஆனால் களநிலவரம் பெரும் கலவரமாக இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். எனவே என்னதான் நடக்கிறது தி.மு.க கூட்டணியில்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சமீபத்தில் அளித்த பேட்டியில், “கூட்டணியில் தற்போதுள்ள ஒற்றுமையைக் காப்பாற்றும் வகையில் தி.மு.கவின் அணுகுமுறை இருக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் தி.மு.கவை குறைகூற முடியாது. இதே நிலை தொடர வேண்டும். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்டது.

ஆனாலும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் தி.மு.க ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது அல்ல. அதே அணுகுமுறை இந்தத் தேர்தலில் தொடரக்கூடாது. தமிழ்நாட்டில் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோதும் தி.மு.க தனித்து நின்று வெற்றி பெறுவது சாத்தியமில்லை” எனக் கொதித்திருந்தார். கூடவே தேர்தலின்போது தி.மு.க அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாமல் இருப்பதையெல்லாம் பட்டியலிட்டார்.
இப்படி கம்யூனிஸ்ட்டுகள்தான் கடுப்பில் இருக்கிறார்கள் என்றால் கதர்கள் கொதிநிலையின் உச்சத்தில் இருக்கிறார்கள். நீண்ட காலமாகவே, ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ எனச் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறிவருகிறார். இந்தச்சூழலில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், “கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம்.

காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. தமிழ்நாட்டின் நிலவரத்தைக் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை நடக்கும்போது, ‘அமைச்சரவையில் பங்கு வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்று கேட்போம்” எனக்கூறிப் பரபரப்பைப் பற்றவைத்தார். முன்னதாக துணை முதல்வர் செல்வப்பெருந்தகை’ எனச் சென்னையில் பல இடங்களில் பிறந்தநாள் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேமனநிலையில்தான் விடுதலை சிறுத்தைகளும் இருக்கின்றன. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அந்தக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, “கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டது வருத்தம்தான். எதிர்வரும் தேர்தலில் கூடுதல் இடங்களைக் கேட்போம். 50 தொகுதிகளில் போட்டியிடக்கூட ஆசை இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
.jpeg)
பின்னர் பேசிய அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன், “அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவை, தி.மு.க-வுக்கு இருக்கிறது. அவர்களும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டிய விருப்பத்தில் இருப்பார்கள்” என தங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். இதேபோல் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை.வைகோ, “தங்கள் கட்சி குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும்” எனத் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் கூடுதல் இடங்களைப் பெற வேண்டும் என அந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. “மனநிறைவு இல்லை என்றாலும் மக்களுக்காகக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இப்படியாக தி.மு.க கூட்டணியில் நாளுக்கு நாள் சலசலப்பு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகள் இப்படியெல்லாம் பேசுவது வழக்கமான ஒன்றுதான். அரசு ஊழியர், டாக்டர்கள் சங்கங்கள் கூட வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்துவார்கள். இப்படியாக அவர்கள் தங்களது இருப்பைப் பதிவு செய்து கொள்வார்கள். அவர்களின் கோரிக்கை நியாயமானதுதான். ஆனாலும் இத்தனை காலமாக வாயைத் திறக்காமலிருந்துவிட்டு இப்போது ஏன் பேசுகிறீர்கள்?.
எடுத்துக்காட்டுக்கு ‘ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடைக்கவில்லை’ என மார்க்சிஸ்ட், வி.சி.க புலம்புகிறது. ஆனால் ஏன் ஆளும்கட்சியை அவர்கள் விமர்சனம் செய்யவில்லை?. இதன் மூலம் சம்மந்தப்பட்ட கட்சிகளை தி.மு.க ஏதோ ஒருவிதத்தில் சொகுசாக வைத்திருக்கிறது என்றுதானே அர்த்தம். தேர்தல் நேரத்திலும், இடைப்பட்ட காலத்திலும் சொகுசாக வைத்திருக்கிறார்கள். எனவேதான் கூட்டணிக் கட்சிகள் அமைதியாக இருக்கின்றன.

தற்போது தேர்தல் நெருங்குவதால் கூடுதலாக ஒன்று, இரண்டு சீட்டுகளையாவது பெற்றுவிட வேண்டும் என நெருக்கடி கொடுப்பார்கள். தேர்தல் செலவு, எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கினால் அதற்குப் பண உதவி என இவ்வளவு செலவு செய்யும் தி.மு.கவிக்குத்தான் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதன் மூலமாக வேறு இடத்தில் தங்களுக்கு டிமாண்ட் இருக்கிறது என்பதை அவர்கள் காட்டிக்கொள்கிறார்கள்.
‘பா.ஜ.க கூட்டணியை விட்டு அ.தி.மு.க வெளியேறினால் அவர்களுடன் இணைய நாங்கள் தயார்’ என வி.சி.க, காங்கிரஸ் தெரிவித்தால் அடுத்த நிமிடமே தி.மு.க கூட்டணி கலகலத்துப் போய்விடும். அது தி.மு.க-வுக்கும் தெரியும். எனவேதான் அவர்களும் இறங்கி வேலை செய்கிறார்கள். எனக்குத் தெறித்து வி.சி.க-வுக்கு வேண்டுமானால் கூடுதலாக ஒன்று, இரண்டு சீட் கிடைக்கலாம்.

வேறு யாருக்கும் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. அதேநேரத்தில் திமுக கூட்டணிக்கு வேறு கட்சிகள் வந்தால் பரவாயில்லை என திமுக நினைக்கிறது. அப்படி கட்சிகள் வரும்பட்சத்தில் ஏற்கெனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் இடங்களை எடுத்து புதிய கட்சிகளுக்குக் கொடுக்க முடியாது. தங்களுடைய இடங்களைத்தான் தி.மு.க விட்டுக்கொடுக்கும். எனவே யாருக்கும் கூடுதல் இடங்களைக் கொடுக்க மாட்டார்கள்” என்றார்.
எப்படியோ தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. அப்போது யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது தெரிந்துவிடும்!