
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்)
ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்திருக்கும் போரில் ஈரானைச் சுற்றியுள்ள மற்ற மத்தியக் கிழக்கு நாடுகளின் அரசுகளின் நிலைப்பாடு ஒப்புக்கு கண்டனம் என்ற அளவில் இருப்பது பலருக்கு வியப்பானதாக இருக்கலாம்.
மத்தியக் கிழக்கில் எல்லா நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் என்ற அடிப்படையில் பார்த்தால் இந்தக் கேள்வி நியாயமானதாகத் தோன்றலாம். ஆனால் மொழியால் பிரிந்து மார்க்கத்தால் ஒன்று பட்டிருக்கும் இந்த பிராந்தியத்தில் மதம் மட்டுமே அந்நாடுகளை ஒன்றிணைக்கவில்லை.
ஈரான் இப்பகுதியில் உள்ள நாடுகள் அனைத்திலும் ஒரு விஷயத்தில் வேறுபட்டது – மற்ற நாடுகள் அனைத்தும் அரபு மொழி பேசும் முஸ்லீம்கள் நிறைந்துள்ள நிலையில், ஈரான் மட்டுமே பாரசீக மொழி பேசுபவர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது.
ஈரானிய முஸ்லிம்கள் ஷியா பிரிவினர் என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.
ஆனால் 20ம் நூற்றாண்டு வரலாற்றில், நாம் முன்பே கோடிட்டுக் காட்டியதைப் போல, ஈரானிய அரசியல் என்பது 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பு, பின்பு என்று இரண்டு கட்டங்களாகப் பார்க்க வேண்டிய ஒன்று.
இஸ்லாமியப் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் ஈரான் பெரிய அளவில் பிராந்திய அரசியலில் கவனம் செலுத்தவில்லை. மன்னர் மொஹமது ரெசா பஹ்லவியின் ஆட்சிக்காலத்தில் ஈரானின் செயல்பாடுகள் உள்நாட்டின் அரசியலில் கவனம் செலுத்தியதாகவே இருந்தன.
மத்தியக் கிழக்கு அரசியல் என்பது அந்தக் காலகட்டத்தில் இஸ்ரேல் – அரபு நாடுகளிடையேயான முறுகல் நிலை, அரபு தேசியவாதம் போன்றவற்றை மையமாகக் கொண்டே இயங்கியது.
புரட்சிக்குப் பின்னர் மாறிய ஈரானிய அரசியல் கண்ணோட்டம்!
ஆனால் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அயோதுல்லா கொமேனியின் தலைமையில் இஸ்லாமியக் குடியரசாக ஈரான் மாறிய பின்னர், புதிய அரசு பிராந்திய அரசியலில் மேலும் கவனம் செலுத்தத் தொடங்கியது,
சுன்னி – ஷியா பிளவுகள் மிகுந்த மத்தியக் கிழக்கு அரசியலில் தன்னை ஒரு ஷியா முஸ்லீம்களின் பாதுகாவலனாகக் கருதிய ஈரானின் புதிய அரசின் அணுகுமுறையில் மாற்றங்கள் தோன்றத்தொடங்கின.
ஷியாக்கள் கணிசமாக இருந்தாலும், சுன்னி பிரிவினர் நிறைந்த பாத் கட்சியின் ஆட்சி அண்டை நாடான ஈராக்கில் நிலவிய காலத்தில், அந்நாட்டு அதிபர் சதாம் ஹுசேன், ஈரானின் புதிய அரசின் நோக்கங்கள் குறித்து சந்தேகப்பட்டார். தனது மதப் புரட்சி அரசியலை ஈரான் மத்தியக் கிழக்கின் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நினைக்கிறதோ என்பது அவரது சந்தேகம் மட்டுமல்ல, பிற சுன்னி அரசுகளின் சந்தேகமும் கூட.
இஸ்லாமியக் குடியரசாக 1979ல் உதித்த ஈரான் அரசுடன் அவர் 1980ல் தொடங்கிய போர் 8 ஆண்டுகள் வரை நீடித்து இரு தரப்புகளுக்கும் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படுத்தி, யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாத நிலையில் முடிந்தது.

புதிய அரசியல் தோற்றுவித்த புதிய எதிரிகள்!
இந்தப் போருக்குப் பின்னர் ஈரானின் தலைவர் அயோதுல்லா கோமெனி இறக்க, அவருக்குப் பின் அந்த அதி உயர் தலைவர் பதவிக்கு வந்த அயோதுல்லா கமெனெய் ஈரானின் வெளியுறவு கொள்கையை இன்னும் விசாலமாக்கி மத்தியக் கிழக்கு முழுவதும் ஈரானின் செல்வாக்கை பெருக்க பல நடவடிக்கைகளை எடுத்தார்.
இந்த நடவடிக்கைகளால் உதித்த ( நாம் ஏற்கனவே பார்த்த) “எதிர்ப்பு நாடுகளின் அச்சாணி” ( Axis of Resistance) போன்ற நகர்வுகள் ஈரானை ஒரு பக்கம் பிராந்திய ரீதியில் வளரும் சக்தியாக உருவாக்கினாலும் அதே அளவு அதற்கு பிராந்திய அளவில் எதிரிகளையும் தோற்றுவித்தன.
ஈரான் தனது பாணி இஸ்லாமியப் புரட்சியை மத்தியக் கிழக்கின் மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் திட்டமிடுவதாக பிற இஸ்லாமிய நாடுகள் , குறிப்பாக சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், போன்றவை நினைத்தன.
இஸ்ரேலோ, தன்னை அழித்தொழிக்க வெளிப்படையாக அறிவித்த ஈரானை பரம வைரியாகப் பார்க்கத் தொடங்கியதுடன், அதன் அணு சக்தித் திட்டம் குறித்தும் அச்சம் கொண்டது .
அமெரிக்க உதவியுடன் தொடங்கிய ஈரானின் அணு சக்தித் திட்டம், ஈரான் இஸ்லாமியக் குடியரசான பின்னர் அதன் மத ரீதியான சித்தாந்தத்தின் மற்றும் தேசியவாதத்தின் ஒரு பெருமைமிகு குறியீடாக மாறத் தொடங்கியது. இது அண்டை நாடுகளையும் , இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவையும் கவலை கொள்ள வைத்தது.
சதாம் ஹுசேனின் வீழ்ச்சியால் பலன் பெற்ற ஈரான்!
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈராக்கின் மீது 2003ல் படையெடுத்து சதாம் ஹூசேனை அகற்றியது, ஈரானுக்கு கிடைத்த ஒரு பெரும் ஜாக்பாட். ஒரு மதசார்பற்ற கட்சியாக சதாம் ஹுசேனின் பாத் கட்சி ஈராக்கில் ஆட்சி செய்தாலும், கட்சியில் நிலவிய சுன்னி முஸ்லீம்களின் ஆதிக்கம், நாட்டில் பெரும்பான்மையாக வாழும் ஷியா முஸ்லீம்களை பாரபட்சமாக நடத்துவதில் முடிந்திருந்தது.
சதாம் ஹூசேனின் இறப்புக்குப் பின், ஈராக்கில் நடந்த ஆட்சி மாற்றம் ஷியாக்களின் கரத்தை பலப்படுத்தியது. ஈராக்கில் ஏற்பட்ட இந்த மாற்றம் ஈரானுக்குத்தான் பேருதவியாக அமைந்தது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று ஒசாமா பின் லாடனின் அல் கய்தா மற்றும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு மீது போர் தொடுத்த அமெரிக்க அதிபர் ஜார் புஷ், பின்னர் ஈராக் மீது போரை விஸ்தரிக்கும் போதும் ஈராக் -ஈரான்-வட கொரியா ஆகிய நாடுகளை “ தீய அச்சு நாடுகள்” ( Axis of Evil) அவை அகற்றப்படவேண்டியவை என்று கூறியது நினைவிருக்கலாம்.
இதற்குப் பதிலடியாகத்தான் ஈரான் , தனது “எதிர்ப்பு அச்சாணி” கூட்டணியை ( Axis of Resistance) உருவாக்கி மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் புதிய மூலோபாய அரசியல் போட்டியை உருவாக்கியது.

ஆப்ரஹாமிய ஒப்பந்தங்கள் – ஈரானுக்கு எதிரான நகர்வு?
ஈரானின் இந்த போட்டியின் விளைவாக சௌதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகள் அமெரிக்காவுடன் மேலும் நெருக்கமான உறவைப் பேண ஆரம்பித்தன.
இது டிரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்தில் உச்ச கட்டத்தை அடைந்து பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பின்னர் மொரொக்கோ ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலுடன் ராஜீய உறவுகளை உருவாக்கிக்கொள்ளும் “ஆப்ரஹாமிய ஒப்பந்தங்கள்” என்று வர்ணிக்கப்படும் கூட்டுறவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இஸ்ரேல் உருவான பின்னர் அதற்கு எதிராக உருவான அரபுத் தேசிய வாத அரசியல், முதலில் எகிப்து, பின்னர் ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் சமரசமாகப் போன முதல் கட்டத்தை அடுத்து, அதன் பின்னர் ஆப்ரஹாமிய ஒப்பந்தங்கள் மூலம் மேலே குறிப்பிட்ட அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் உறவுக்குக் கை கொடுக்கத் தொடங்க, நீர்த்துப் போக ஆரம்பித்தது .
இதற்கு மூலகாரணமாக பல அரசியல் விமர்சகர்கள் கருதுவது இஸ்லாமியக் குடியரசான ஈரானின் எழுச்சி அரபு நாடுகளில் தோற்றுவித்த சந்தேகங்களைத்தான்.

ஈரானின் கேந்திர நகர்வுகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு உத்திரவாதத்தை நோக்கியே இந்த அரபு நாடுகள் அமெரிக்காவின் ஆதரவுடன் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலுடன் எட்டின.
மத்திய கிழக்கில் ஈரானின் மற்றுமொரு எதிரி நாடான சௌதி அரேபியாவும், இஸ்ரேலுடன் உறவுகளை சீரமைத்துக்கொள்ள இதே மாதிரியான நகர்வுகளை எடுத்துக்கொண்டிருந்த நிலையில்தான், 2023ல் இஸ்ரேல் மீதான் ஹமாஸின் தாக்குதலும், அதனையடுத்து காசா பகுதி மீது இஸ்ரேல் தொடங்கி நடத்திக்கொண்டுவரும் பேரழிவை ஏற்படுத்திய போரும் , சௌதி அரேபியாவின் இந்த நகர்வுகளுக்கு தற்காலிகமாக ஒரு முட்டுக்கட்டை போட்டிருக்கின்றன.
ஆனால் இந்த ஆப்ரஹாமிய ஒப்பந்தங்கள் , ஈரானின் பிராந்திய அரசியல் அபிலாஷைகளை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் மூலோபாய நடவடிக்கைகளை மேலும் விரிவடையைவே செய்தன என்று மத்திய கிழக்கு பகுப்பாய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த ஆப்ரஹாமிய ஒப்பந்தத்தின் பின்னர்தான், ஈரான் ரஷ்யா மற்றும் சீனாவுடன் தனது உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது.
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்த பின் அதற்கு ஆயுத உதவிகளை ஈரான் செய்தது என்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.
ஆப்ரஹாமிய ஒப்பந்தங்களுக்கு ஒரு எதிர்வினையாக, ஈரான் , முஸ்லீம் -மேற்கு ஆசிய பேச்சுவார்த்தை அமைப்பு ( Muslim West Asian Dialogue Association) என்ற முன்னெடுப்பைத் தொடங்கியது. இஸ்ரேலை மட்டும் மத அடிப்படையில் தவிர்த்து பிற மத்தியக் கிழக்கு முஸ்லீம் நாடுகளுடன் மட்டுமல்லாமல், அதன் வரலாற்று ரீதியிலான போட்டி நாடான துருக்கியுடனும் கூட்டுறவு என்ற அடிப்படையில் ஈரான் நடவடிக்கைகளை எடுத்தது.
இது போதிய அளவு முன்னேற்றம் காணவில்லை என்றாலும், ஈரான் மத்திய கிழக்கு அரசியல் சதுரங்கத்தில் ஒரு முக்கிய பங்காற்றும் நாடாக உருவாகியிருப்பதைக் காட்டியது.
ஈரானின் இந்த நகர்வுகளுக்கு கடும் பின்னடைவு கடந்த ஆண்டு இஸ்ரேல் எடுத்த பல அதிரடி நடவடிக்கைகளால் ஏற்பட்டது.

காசாவில் ஹமாஸின் ராணுவ மற்றும் அரசியல் பலம் தகர்க்கப்பட்டது, ஹெஸ்பொல்லா இயக்கத்தின் ராணுவ வல்லமை குலைக்கப்பட்டது ஆகியவற்றோடு, ஈரானின் முக்கிய கூட்டாளியான சிரியாவின் அதிபர் பஷார் அசாத், சுன்னி கிளர்ச்சி அமைப்புகளால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது ஈரானின் பிராந்திய அரசியல் ஆசைகளுக்குக் கிடைத்த ஒரு கடும் பின்னடைவு என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஈரான் பிராந்திய அளவில் 2024க்குப் பின் பலவீனப்பட்டிருந்த நிலையில்தான், டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வந்தது, இஸ்ரேலின் கரங்களை வலுப்படுத்துவதாக அமைந்தது.
டிரம்ப்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் ஆரம்ப மாதங்களில் ஈரானின் அணு சக்தித் திட்டத்தைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சிகள் மீண்டும் தொடங்கின. இதற்கான பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த நிலையில்தான் இஸ்ரேலின் ஜூன் 13ம் தேதி தாக்குதல் தொடங்கி அப்பேச்சுவார்த்தைகளிலிருந்து ஈரான் விலகிக்கொள்ள வழி வகுத்தன
ஈரானின் அணு சக்தித்திட்டத்தை முற்றிலும் எதிர்க்கும் நெதன்யாகு, மீண்டும் அமெரிக்காவின் முன் முயற்சியில் ஈரான் யுரெனியச் செறிவூட்டலை கட்டுப்படுத்திக்கொண்டு தனது அணு சக்தித் திட்டத்தை “காப்பாற்றி”க் கொள்ளுமோ என்ற அச்சத்திலேயே இத்தாக்குதல்களை தொடங்கியிருக்கிறார் என்பது அவர் மீது வைக்கப்படும் ஒரு விமர்சனம்.

ஈரானின் அணு சக்தித் திட்டமும், அதன் ஷியா மதப்பிரிவு அரசியல் மூலம் மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் உருவாக்கிக்கொள்ள நினைத்த ஆதிக்கமும், அதன் சித்தாந்த ரீதியான அமெரிக்க -இஸ்ரேல் எதிர்ப்பும் , ஈரானின் “முல்லாக்கள் அரசை” இப்போது ஒரு இருத்தலுக்கான நெருக்கடியில் தள்ளியிருக்கின்றன.
இந்த நெருக்கடியிலிருந்து ஈரான் மீண்டால் அதன் அணு சக்தி திட்டம் தப்புமா என்பது பற்றியும் , ஈரானின் அணுசக்தித் திட்டம் பற்றிய அமெரிக்க – இஸ்ரேலியக் கவலைகள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்!