
சென்னை: சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து நேற்று அதிகமாக இருந்தது. அதனால் பெரிய மீன்களின் விலை குறைந்தது. கடலில் மீன் வளத்தை பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் வங்கக் கடலில், தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த ஏப். 15-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. அன்றுமுதல் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
இதன் காரணமாக பெரிய மீன்கள் வரத்து இல்லாமல் வஞ்சிரம், கொடுவா, மயில் கோலா உள்ளிட்ட மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. அரபிக் கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் கொண்டுவரப்பட்டன.