
கேரள மாநிலம் கண்ணூர் காயலோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஷீதா(40). இவர் கடந்த 17-ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலின்பேரில் அங்குசென்ற பினராயி காவல்நிலைய போலீஸார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரஷீதா தூக்கில் தொங்கிய இடத்தின் அருகே இருந்து அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை போலீஸார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் 3 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “ரஷீதாவும் அவரது ஆண் நண்பரான ரஹீஸ் என்பவரிடம் கடந்த 15-ம் தேதி மாலை 4 மணியளவில் அச்சங்கரை பள்ளிவாசல் அருகே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த சிலர் ரஷீதாவை அவமானப்படுத்தும் விதமாக பேசி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த இளைஞரை சுமார் 5 மணி நேரம் விசாரித்துள்ளனர். அப்போது இளைஞரின் மொபைல் போனை வாங்கி அதில் இருந்த போட்டோக்களை ஆய்வு செய்துள்ளனர். மேலும், ரஷீதா மற்றும் ரஹீம் ஆகியோரின் வீட்டில் இருந்து ஆட்களை வரவளைத்து பேசி அனுப்பி உள்ளனர். இதனால் மனம் உடைந்த ரஷீதா வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ரஷீதா தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தில் கூட்டமாக சேர்ந்து பலர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தன்னை அவமானப்படுத்தியதாகவும் கடிதம் எழுதி வைத்துள்ளார். இது சம்பந்தமாக ரஹீஸ் பினராயி காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஹ்னாஸ், முபஷீர், பைசல் ஆகியோர் கைது செய்யப்பட்டு தலசேரி ஜூடீசியல் பஸ்ட் கிளாஸ் மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்றனர்.

அதே சமயம் ரஷீதா தற்கொலைக்கு அவரது ஆண் நண்பர் ரஹீஸ்-தான் காரணம் என ரஷீதா-வின் பெற்றோர் தலசேரி ஏ.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து ரஷீனாவின் தந்தை முஹம்மது, தாய் பாத்திமா ஆகியோர் கூறுகையில், “ரஷீனாவின் நகைகளை அவரது ஆண் நண்பர் பறித்துக்கொண்டார். அவர்களுக்கு சோசியல் மீடியா வழியாக பழக்கம் ஏற்பட்டது. பண நெருக்கடி காரணமாக சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்தார் ரஷீதா. 5 மணி நேரம் இளைஞரை பிடித்துவைக்கவில்லை. அவரது பெற்றோர் வருவதற்கு காலதாமதம் ஆனதுதான் நேரம் ஆனதற்கான காரணம்” என்றனர்.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கண்ணூர் மாவட்ட தலைவர் பஷீர் கண்ணடிபறம்பு கூறுகையில், “அங்கு நடந்தது விசாரணை அல்ல. இருவருக்கும் உள்ள பிரச்னையில் ரஷீனா மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியஸ்தம் செய்துகொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கட்சி அலுவலகத்தில் இடம் அளித்தோம். ரஷீனாவின் தற்கொலைக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் சம்பந்தம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கண்ணூர் சிட்டி போலீஸ் கமிஷனர் பி.நிதின்ராஜ் கூறுகையில், “ஆண் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆட்கள் கூட்டமாக சேர்ந்து வந்து விசாரித்ததாகவும், மோசமாக சித்திரித்து மிரட்டியதாகவும் ரஷீதா தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்து தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் பெயர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததால்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷீதாவின் ஆண் நண்பரை எஸ்.டி.பி.ஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று 5 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். இது சம்பந்தமாக ஆண் நண்பர் மீது புகார் அளித்தால் அதுகுறித்தும் விசாரணை நடத்துவோம்” என்றார்.
