
நிலா காய்ந்துகொண்டிருந்த வசந்தகால இரவொன்றில் கடலோரச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். வரிசையாகக் கப்பல்கள் சமுத்திரத்தில் தொலைவில் மிதந்துக்கொண்டிருக்கின்றன.
வேடிக்கை பார்த்தபடியே, முட்டை வடிவ பாறையொன்றில் வானத்தை அண்ணாந்துப் பார்த்தபடி படுத்திருந்தேன். இடதுபுற அடுக்குமாடிக் குடியிருப்புகளின் உச்சிகளில் எரியும் விளக்கொளிகள் வெளிறிய நீலப் பின்னனியோடு வெளிச்சத்தைச் சிந்திக்கொண்டிருந்தன.
எதிர்திசையில் அதிவேகமாக விரைவுச்சாலையில் ஓடிக்கொண்டிருந்தது நகரம். என்னருகில் இரு நைஜீரியர் வந்து அமர்ந்திருந்தனர்.
இடையிடையே கவிதை, கவிதையெனக் காதில் விழ, உரக்கச் சிரித்துக்கொண்டனர். இடையிடையே ஓகாரா, அச்சிபே, சோயின்கா பெயர்களும் அடிபட்டன.
இது எனது பிரமையாகக் கூட இருக்கலாம், ஆர்வமிகுதியால் எழுந்து சென்று அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். நைஜிரியாவிலிருந்து வந்திருக்கும் ஆய்வு மாணவர்கள் அவர்கள்.
தலைமுடியைச் சரடாகப் பின்னியிருந்த விதமும், இழுத்து இழுத்துப் பேசிய தொனியும் புதிய அனுபவத்தைத் தந்தன. சிறிது நேரம் பேசிவிட்டுப் இதற்கு மேல் பேசுவதற்கு வேறெந்தச் சொற்றொடருமில்லையென உணர்ந்தபோது கைகள் தானாக நீண்டு குலுக்கிக்கொண்டன. திரும்பி வரும்போது சோயின்கா என் கூடவே வந்துவிட்டார்.
வோலே சோயின்கா பன்முகப் படைப்பாற்றல் கொண்ட ஆளுமை; எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் கறுப்பின எழுத்தாளர். அவரது எழுத்து நைஜீரியாவை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யாமல் முழு ஆப்பிரிக்காவிற்குமான அறைகூவலாகத் திகழ்ந்தது.
ஆப்பிரிக்காவின் அரசியல், சமூகச் சிக்கல்கள், புலம்பெயர் வாழ்வுக்கு மத்தியிலான துன்பங்களின் மீது அவர் பார்வையைச் செலுத்தியிருக்கிறார்.
நைஜீரியாவில் பிறந்த சோயின்கா, ஆங்கிலத்தில் எழுதும் கவிஞர் என்பதோடு, நாடக ஆசிரியர் என்ற அடையாளத்தையும் பெற்றவர்.
இனப் பாகுபாடு பற்றிய முக்கியமான கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், சுயசரிதை, கட்டுரைகள் எழுதியவர். அவர் நாடக ஆளுமையாகச் சுறுசுறுப்பாக இன்றைக்கும் இயங்கிக்கொண்டிருப்பவர். இங்கிலாந்திலும் தனது நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.
The Man Died – சிறையிலிருந்தபோது எழுதிய நூல். இது நைஜீரிய உள்நாட்டுப் போரின் போது சிறையில் சோயின்கா அனுபவித்த துயரங்களைப் பேசுகிறது. பிறகு நைஜீரிய நீதிமன்றம் இந்தப் படைப்பைத் தடை செய்தது.
‘Poems of Black Africa’ என்ற நூலைத் தொகுத்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் நிறவெறி மற்றும் இன ரீதியான பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் மண்டேலாவின் உயர்ந்த துணிச்சலைப் பாராட்டும் விதமாக எழுதிய No, He Said கவிதை புகழ்பெற்றது.
சோயின்காவின் குழந்தைப் பருவம் நைஜீரியாவின் அபியகுடா நகரத்துக்கு அருகே யாருபாவில் கழிந்தது. அவரது தந்தை தலைமை ஆசிரியராக இருந்த பள்ளியிலேயே படித்தார். அவரது தாயார் ஒரு சமூகச் சேவகர். இருவரும் கிறித்துவர்கள்.
அவர்களின் மூதாதையர் யாருபா நம்பிக்கைகளைப் பின்பற்றியவர்கள். மர பொம்மைகள், பேய்கள், மந்திரவாதிகளெனப் பழமையான ஆப்பிரிக்க மரபும், கிறித்தவமும் சேர்ந்து சோயின்கா மீது தாக்கம் செலுத்தியுள்ளது.
பல்வேறு வகையான உருவங்களும் சிலைகளும் முகமூடிகளுமாகப் பண்டைய கலைப்பொருள்களைச் சேகரித்து வீடு முழுவதும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஆப்பிரிக்க வாழ்வியல், கலை வடிவங்களுடன் நெருக்கமான படைப்பு வடிவத்தைத் தேடும் கலை சோயின்காவுடையது. கறுப்பின மக்களின் அன்றாட வாழவியல் அவரின் படைப்புகளில் அதிகம் பதிவாகியுள்ளது. எதார்த்தத்துக்கும் புனைவுக்கும் கனவுக்கும் இடையிலான கோடு அழிந்த படைப்புலகம் சோயின்காவுடையது.
கிரேக்கத் துயர நாடகங்கள் முதல் மேற்கத்திய இலக்கியங்கள் வரை நன்கு கற்றவர். தனது நாடகங்களை ஆப்பிரிக்காவின் வேர்களோடு பிணைத்து, அதை உலகளாவிய அனுபவமாகவும் மாற்ற முடிந்த கலை அவருடையது.
சிறையில் இருந்தபோதும், வெளியே வந்த பிறகும் அவரது எழுத்தில் கனிவும் சோகமும் நிறைந்திருக்கின்றன. உளவியல், தார்மீக, சமூக மோதல்களை அதன் சிக்கல்களோடு சித்தரித்த மேதை அவர்.
ஆப்பிரிக்கக் கலாச்சாரம், தொன்மங்கள், புராணங்கள், சடங்குகள் தனக்கென ஓர் அழகியலை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
வோலே சோயின்கா, இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஆங்கிலத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது லண்டனில் உள்ள ராயல் கோர்ட் தியேட்டர் நிறுவனத்தாருக்கு திரைக்கதை எழுதத் தொடங்கினார்.
பிறகு கவிதைக்குள் வந்தார். நைஜீரியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்காக அவர் தனது முகமூடி நாடக நிறுவனத்திற்காக ‘எ டான்ஸ் ஆஃப் தி ஃபாரஸ்ட்ஸ்’ என்ற நாடகத்தைப் படைத்தார். இந்த நாடகம் என்கவுண்டர் விருதை வென்றது.
1964 ஆம் ஆண்டில், வோலே சோயின்கா ஓரியன் நாடக நிறுவனத்தை உருவாக்கினார். அவரது நாடகங்கள் அமெரிக்காவில் தொலைக்காட்சித் தொடராகவும் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
அமெரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். செனகலில் நடந்த நீக்ரோ கலை விழாவில் The Lion and the Jewel நாடகம் நிகழ்த்தப்பட்டது. பின், இபாடனில் உள்ள நாடகக் கலைத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இஃபே பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1986 ஆம் ஆண்டு, அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
‘மண்டேலாவின் உலகம் மற்றும் பிற கவிதைகள்’ வந்தது. பிறகு “Aké: The Years of Childhood”, “Ìsarà: A Voyage Around Essay” என நான்கு சுயசரிதைகளை வெளியிட்டுள்ளார்.
சல்மான் ருஷ்டிக்கு ஆதரவாகச் ‘சுதந்திரத்திற்கான ஜிஹாத்’ என்ற கட்டுரையை வெளியிட்டபோது அவருக்குக் கொலை மிரட்டல் வந்ததாகக் குறிப்பிடுகிறார்.
சோயின்காவின் புகழ்பெற்ற நாடகம் ‘Death and the King’s Horseman’ என்ற நாவலைத் தழுவிய திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது. கவிதை, நையாண்டி, ஆச்சரியம், கொடுமை, காமம் எனப் பல்வேறு அம்சங்களைக் கொண்டது.
அவரது ஒவ்வொரு மேடைப் பேச்சும் கறுப்பினத்திற்கு விழிப்புணர்வைத் தந்திருக்கின்றன. அவர் பேசி முடிக்கும்போது, ஒரு பக்கம் வாசகர்கள் எழுந்து நின்று கைகளைத் தட்டும்போது, இன்னொரு பக்கம் அதிகாரிகள் தங்கள் நாட்டின் சட்டங்களைத் திருத்தத் தொடங்கியிருக்கிறார்கள். தார்மீக கோபத்தையும் காதலையும் சேர்ந்து சுமந்தவர் அவர்.

அபியகுடாவிற்கருகில் குறைந்த மக்கள் தொகை கொண்ட வனப்பகுதியில் தனது வீட்டைக் கட்டியிருக்கிறார். நோபல் பரிசைப் பெற்ற பிறகு, அப்பகுதியைக் கலைஞர்களின் கூடுகைக்காக விரிவுபடுத்தியிருக்கிறார்.
காடுகளுடன் இணைந்து வாழ்வதற்கான சுற்றுச்சூழலை உருவாக்க இஜெக்பா எனும் திட்டத்தைக் கையிலெடுத்து அழிக்கப்பட்ட விதைகளை மீண்டும் விதைத்திருக்கிறார். அதுதொடர்பான காணொளிகள் பார்த்தேன்.
அவருடைய பசுமை நடவடிக்கையாக அமைதியான இடத்தில் வீட்டைக் கட்டியபின் பூர்வீகத் தாவர இனங்கள் கொண்டுவந்து கலைஞர்களும் காடும் செழித்து வளரக்கூடிய இடத்தை உருவாக்கியிருக்கிறார்.
அங்கு ஓர் அரங்கத்தை அமைத்து, ஆண்டுதோறும் A dance of the forests நிகழ்வு நடைபெறுகிறது. இங்கு நாடகம், நடனங்களுக்கான ஒத்திகைகள், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
ஏழு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். ‘என் முதல் வெள்ளை முடிக்கு’ என்னும் கவிதை சுவாரசியமானது
——
திடீரென முளைத்தது,
மழைக்குப்பிறகு முளைத்த மக்காச் சோளத்தைப் போல
தண்ணீரோடு கலந்து மந்தமான பாலைப்போல
எறும்பின் கொம்பாகச் சுருங்கிவிட்ட மின்னல் போல
குதூகலிக்கிற சில்வண்டுகள் வெயிலில் உலர்வதுபோல.
—–
அடர்ந்த மயிர் வனத்தில் நுழைந்த, தாக்குதல்காரர்களைப் போல மூன்று வெள்ளை முடிகள் நுழைந்து தமது தலையெழுத்தை நிர்ணயிக்கின்றன.
மின்கம்பிபோல் சுருண்டு, உயிரில் இழைந்த வெண்மையான நூல்போல் தனது நரைக் காலத்தை மெல்ல நெய்கிறது. பின் மெல்ல தலையை ஆக்கிரமிப்புச் செய்து கொள்கிறது.
நைஜீரிய சமூகத்துக்குள், மூன்று வெள்ளைமுடிகள் முளைப்பதைப் போல் வெள்ளையர்கள் ஆப்பிரிக்காவில் நுழைந்து, கறுப்பினச் சமூகத்தை ஆக்கிரமித்து ஆளுமை செய்ததைக் குறீயீடாகக் கொண்டு எழுதியுள்ளார்.

தொலைபேசி உரையாடல் ‘டெலிபோன் கன்வர்சேஷன்’ கவிதை முகமூடியைக் கழற்றிக் காட்டுகிறது. கறுப்பினப் பாகுபாட்டையும், சமூக மறுதலிப்பையும் சொல்லும் கூர்மையான கவிதை.
புனைதன்மையுடனும் நையாண்டியோடும் விளங்குகிறது. வாடகைவீடு தேடும் கறுப்பினத்தவருக்கும், ஒரு வெள்ளையினத்து வீட்டு உரிமையாளருக்கும் இடையே நடைபெறும் சாதாரணத் தொலைபேசி உரையாடல்தான் இக்கவிதையின் உள்ளடக்கம்.
கவிதையில் வருபவர் வாடகைவீடு தேடுகிறார். தூரத்திலிருக்கும் வீட்டு உரிமையாளரைத் தொலைபேசியில் அழைக்கிறார். ‘நான் ஆப்பிரிக்கன்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்ட வார்த்தைக்கு வந்த பதில் நீண்ட மௌனம்.
கீறிய குரலைக் கழுவிக்கொண்டே ‘எவ்வளவு கறுப்பு’ என்று வீட்டு உரிமையாளரின் பதில் உறைய வைக்கிறது கவிதை. HOW DARK?”…I had not misheard….”ARE YOU LIGHT OR VERY DARK? என்ற கேள்விகளில் தொடர்கிறது உரிமையாளரின் குரல்.
தொடர்ந்து ‘பிளைன் சாக்லேட்டா, மில்க் சாக்லேட்டா?’ என்னுடைய உள்ளங்கை, பாதங்களெல்லாம் கறுப்பு இல்லை என்றபடி வாடகைக்குக் கேட்பவர் கிண்டலாகப் பதிலளிக்கிறார்.

இக்கவிதையின் வெற்றி என்பது தனது தோற்றத்தை அவமானமாக நினைக்காமல், மாறாக அதைக் கொண்டு விளையாடுகிறார் கவிதைசொல்லி. வீடு கிடைக்காத ஏமாற்றமும் ஒதுக்கப்படுவதால் ஏற்படும் எரிச்சலுமாகப் பின்னப்பட்ட உரையாடல் நடை கவிதை இது.
இதில் வரும் தொலைபேசி, தபால் பெட்டி, பேருந்து போன்றவை சிவப்பு நிறத்தைக் கொண்டது. சிவப்பு அதிகார வர்க்கத்தைச் சுட்டுகிறது. இது தனிப்பட்ட ஒருவரின் அனுபவம் அல்ல. ஆனால் ஒட்டுமொத்த சமூகமாக இது யாருக்கோ உலகம் முழுக்க நடந்துகொண்டேயிருக்கிறது.
ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரை நேரில் பார்ப்பதே போதுமானது என்ற தவறான நம்பிக்கை இன்றைக்கும் நிலவுகிறது. இன்னும் பல உறவுகள் தோற்றத்தின் அடிப்படையில் உருவாகியும் முறிந்தும் போகின்றன. மேலோட்டமாக நிறப்பாகுபாடுகள் இல்லாதது போலத் தெரிந்தாலும் என் சொந்த அனுபவத்திலேயே, இன்னும் பாகுபாடுகள் நீடித்தபடிதான் இருக்கின்றன.
வோலே சோயின்காவின் தி லயன் அண்ட் தி ஜுவல் நாடகத்துக்கு, நடிகர் சார்லி சாப்ளின் அறுபது வயதுக்குப் பின்னர்ப் பதினேழு வயது இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட சம்பவமே உந்துதல்.
முதிய வயதில் சாப்ளின், அப்போது பதினேழு வயதுடைய ஊனா ஓ நீலை மணந்தார். இருவரின் வயது இடைவெளியும் அத்தகைய திருமணத்தின் சமூகத் தாக்கங்களும் நாடகத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கிறது. மூன்று பகுதிகளாக வரும் இந்த நாடகம் வாசிப்பிற்கும் இனிமையானது. மூன்று முறை திருமணம் செய்த வோலே சோயின்காவிற்கு, இந்தத் திருமணம் வித்தியாசமாகத் தெரிய, அன்றைய சமூகத்தின் பழக்க வழக்கங்களையும், கலாச்சார மரபுகளையும் நாடகத்தின் வழி பின்னியிருக்கின்றார்.
நைஜீரியாவில் ராணுவ ஆட்சி நடைபெற்ற போது இவரின் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டுப் பின்னர் நாடு கடத்தப்பட்டார். நைஜீரியாவின் ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து விமர்சனம் செய்தும் எதிர்த்தும் போராடி வந்ததால், ஆட்சியாளர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தார். நாட்டைவிட்டுத் தப்பியோடி, சில ஆண்டுகள் வெளியில் வசிக்க நேர்ந்தது. அப்போது ராணுவ அரசாங்கம் மரணத் தண்டனை வழங்கியது. ஆட்சி மாற்றத்திற்குப் பின், நாடு திரும்பியவர், சுதந்திரமாக வாழத் தொடங்கினார்.

ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்கைச் சுரண்டவே காலனிய ஆட்சிகள் அங்கே நீடித்தன. நைஜீரியாவும் வெள்ளையர்களின் ஆதிக்கத்திலேயே 1950களின் இறுதிவரை நீடித்தது. இதன் தாக்கங்களுடன் நைஜீரிய இலக்கியம் கணிசமாக விரிவடைந்துள்ளது. சமகாலக் கறுப்பின ஆப்பிரிக்க இலக்கியத்தின் முன்னணிக் கலைஞராக வோலே சோயின்கா கருதப்படுகிறார். நைஜீரியாவின் நவீன எழுத்தாளராக வோலே சோயின்கா தனித்துவமானவராகத் திகழ்கிறார்.
1975 ஆம் ஆண்டுத் தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சிக்கு எதிராக மொசாம்பிக்கில் போர் அறிவிக்கப்பட்டிருந்த காலத்திலும், ரோபன் தீவில் நெல்சன் மண்டேலா கால்களில் சங்கிலியுடன் சிறைப்பட்டிருந்த நேரத்திலும், சோயின்கா எழுதிய கவிதைகள் தீவிரமான உணர்வுகளை வெளிப்படுத்தின. இருந்தபோதும், அவை துண்டுப்பிரசாரங்களோ அல்லது கொள்கை முழக்கங்களோ அல்ல. ஆழ்ந்த கலை உணர்வுடனும், அழகியல் நுணுக்கத்துடனும் அமைந்திருந்தன. உள்நாட்டுப் போருக்கு எதிராகப் பேசியதற்காக விசாரணையின்றிச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
வோலே சோயின்கா, தனது 26 மாத தண்டனைக் காலத்தில் 22 மாதங்கள் தனிமைச் சிறையில் கழித்தவர். ஒரு துண்டுக் காகிதம் கிடைத்தாலும் உடனே அதில் கவிதை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சிறையிலிருக்கும்போது மருத்துவர் ஒருவரின் பாக்கெட்டிலிருந்து ஒரு பேனாவைத் திருடிவிட்டாரென்றும், இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சிறையிலிருந்தபோது எழுதியவை இறுதியில் தொகுப்பாக வெளியீடு கண்டன. அவை 1986 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெறவும், ஆப்பிரிக்க எழுத்துகள் மீது உலகின் கவனம் விழவும் காரணமாக இருந்தன. “’புத்தகங்களும் அனைத்து வகையான எழுத்துகளும் உண்மையை அடக்கி ஒடுக்க முயற்சிப்பவர்களுக்கு எப்போதும் பயங்கரமான ஆயுதங்களாகத் திகழ்கின்றன,’ என்கிறார்.

ஒரு கைதியாகச் சிறைச்சாலையில் கிடைத்த அனுபவங்களைப் பற்றியது Live Buriel, சிறையில் இருப்பவர்கள் செய்யாத குற்றத்திற்காகச் சாகும்வரை சித்திரவதைச் செய்யப்படுகிறார்கள். உயிருடன் இருக்கும்போதே அடக்கம் செய்வது, பயத்தை உருவாக்குவதென்கிறார்.
சாமானியர்களின் மீது கவனத்தைக் குவிக்கவே கலைகள் பெரும்பாலும் முயல்கின்றன. ஆனால் தனது நாட்டில் நிலவும் கொந்தளிப்பிற்கு, “குமிழி வெடித்து எல்லா இடங்களிலும் சிதற வேண்டியிருந்தது, புனைவு வடிவம் மட்டுமே அதன் சிதறலைக் கட்டுப்படுத்த முடியாது.” என்று குறிப்பிடுகிறார். தனது 87ஆவது வயதில் எழுதி நைஜீரியாவிற்குப் பரிசாக வழங்கிய புத்தகம் Chronicles from the Land of the Happiest People on Earth என்பதைச் சொல்லலாம்.
பேராசை, துரோகம், அதிகாரத்தின் இயல்பைப் பற்றிய குறுக்குவெட்டுப் பார்வை இது. பழங்குடிச் சடங்குகள், யோருபா மொழி பேசுவர்களின் கலாச்சாரக் கதைகள், அவரது வீட்டில் பெண்கள் சந்திக்கும் கதைகள், பிரசங்கங்கள், பாடல்கள், பள்ளி, குடும்ப வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் வரை அத்தனையையும் எழுதி, ஆப்பிரிக்கத் தொல் மரபுகளின் மர்மங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
‘ஒருபுறம் அரசியல் செயல்பாடு மற்றும் என் தந்தையைச் சுற்றி நடந்த மிகவும் உறுதியான அரசியல் விவாதங்கள் ஆகியவற்றின் மிகவும் உற்சாகமான சூழலில் நான் வளர்ந்தேன், அப்போது நடந்து கொண்டிருந்த உலகப் போர் முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் விலை வரை அனைத்தையும் அவர்கள் விவாதிப்பார்கள், பெரியவர்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றம் என்னைக் கவர்ந்தது,” என்று கூறும் சோயின்கா கவிதைகள், ‘பென்குயின் மாடர்ன் பொயட்ரி’ வரிசையில் ஆப்பிரிக்கக் கவிதைகள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
#சொற்கள் மிதக்கும்
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…