
மதுரையில் நடைபெறுவது அரசியல் விழா அல்ல, தமிழ்க்கடவுள் முருகனைப் போற்றும் மாநாடு என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
இன்று மதுரை வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசும்போது, “கும்பாபிஷேகம், முருகன் மாநாடு நடத்துவதில் அரசியல் இல்லை. மக்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தினால் அரசியல் ஆதாயம் தேடுவது என்று அர்த்தமா?
மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தல் பொன் சட்டியா? திமுக நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. ஆனால், மக்களின் பேரெழுச்சியுடன் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டுக்கு பவன் கல்யாண் கட்சித் தலைவராக வரவில்லை. முருக பக்தராக வரவுள்ளது மிகப்பெரிய பெருமை. அதை திமுக அரசு ஆதரிக்க வேண்டும்.
சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வதுதான் அக்மார்க் மதவாதம். முருகனைப் போற்றுவோம் என்று சொல்வது ஆன்மீகம்.
முருக பக்தர்கள் மாநாட்டில் அதிகமான மத நல்லிணக்கத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
முருக பக்தர்கள் என்று சொல்லி மதவாதம் செய்கிறார்கள் என மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முருகன் தமிழ்க்கடவுள் என்றால், அவர்களுடைய மூதாதையர்களும் தமிழர்கள்தானே?

மதுரையில் மாற்று மதத்தினர் முருகன் மாநாட்டுக்கு அரணாக நிற்க வேண்டும். சுல்தான்கள் ஆட்சியில் கூட கோயிலுக்கு நற்பணி செய்ததாகத்தான் வரலாற்றில் உள்ளது” என்றார்.