
காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பரிவு தேசிய பொதுச் செயலாளர் வி.எம்.சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். புதிதாக அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்து, வேல் பரிசாக வழங்கினர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, “முருகர் மாநாடு அன்று வேல் கொடுத்துட்டீங்க… மதுரைக்குப் போகாமலே முருகர் அருள் கிடைத்துவிட்டது” என்று கூறினார்.
குறிப்பாக, மதுரையில் முருகர் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பாஜக சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி முருகர் பக்தர் என்பதால் நிச்சயம் முருகர் மாநாட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் முருகர் மாநாட்டில் பங்கேற்காமல், வாழ்த்து மட்டுமே தெரிவித்திருந்தார்.