
இந்து முன்னணி அமைப்பின் சார்பாக இன்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தவிருக்கிறது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, முருகன் மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சீமான், “முருக பக்தர்கள் மாநாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. முருகனும் சிவனும் இந்து கடவுள்களா? சோறு, அவியல், கூட்டு, பொரியல், சாம்பார் என எல்லாவற்றையும் சேர்த்து வெள்ளைக்காரன் சாப்பாடு எனப் பெயர் வைத்தது போல, எல்லா கடவுளையும் ஒன்று சேர்த்து இந்து எனப் பெயர் வைத்துவிட்டான்.
முருகனும், சிவனும் இந்து என அவர்களுக்கே தெரியாது. சைவ மாதத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் நாங்கள் வீர சைவத்தைச் சேர்ந்தவர்கள். இப்போதைக்குத் தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு எதுவும் இல்லை.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவரைத் தூக்கினார்கள். தமிழ்நாட்டில் வள்ளுவனுக்குக் காவியைப் போட்டுப் பார்த்தார்கள். வேலை தூக்கிப் பார்த்தார்கள். எதுவும் எடுபடவில்லை என்றதும், எங்கள் இறையை எடுத்து இப்போதும் வேலை தூக்கியிருக்கிறார்கள்.
வாக்கைக் குறிவைத்து மாநாடு நடத்துகிறார்கள். ஆனால், எத்தனை மாநாடு போட்டாலும், அவர்கள் எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி பின்னால்தானே நிற்க வேண்டும். இந்த முருகனைக் கும்பிட்டுவிடு அந்தப் பழனிசாமி பின்னால் சென்று நிற்க வேண்டும். அவர்களுக்கும் வேறு வழியில்லையல்லவா” என்றார்.