
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. இஸ்ரேலுடன் அமெரிக்கா கைகோர்த்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது. மூன்று அணு ஆயுத தளங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கியிருப்பதாகவும், இதை அமெரிக்காவை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்ட ட்ரம்ப், இனி அமைதிக்கான நேரம் எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ஈரானின் அணு ஆயுதத் தளங்கள் தாக்கப்படுவது குறித்து ஏற்கெனவே ரஷ்யா எச்சரித்திருந்த நிலையில், இந்தப் போர் உலக நாடுகளுக்கு மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் தன் எக்ஸ் பக்கத்தில், “அதிபர் ட்ரம்ப் தனது நோக்கங்களுக்காக நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.
இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதற்கு காங்கிரஸின் அங்கீகாரத்தைப் பெறத் தவறிவிட்டார். மேலும் மத்திய கிழக்கில் ஒரு பேரழிவு தரும் போரைத் தொடங்கும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தனது ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கையால் ஏற்படும் எந்தவொரு பாதகமான விளைவுகளுக்கும் முழுமையான பொறுப்பை ட்ரம்ப் ஏற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், “ட்ரம்பின் தாக்குதல்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானது. இந்த நாட்டை போருக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஒரே அமைப்பு அமெரிக்க காங்கிரஸ் மட்டுமே. அதிபருக்கு இதில் முடிவெடுக்க உரிமை இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஐ.நா என்ன சொல்கிறது?
ஈரான் மீது தாக்குதல் நடத்தியது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “இந்த மோதல் கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடிய அபாயத்தை அதிகரித்து வருகிறது. இந்தப் போரால் பொதுமக்களுக்கும் உலகிற்கும் பேரழிவு தரும் விளைவுகள் ஏற்படும். இந்த ஆபத்தான நேரத்தில், குழப்பமான சூழலை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இந்தப் போருக்கு இராணுவத் தீர்வு எதுவும் இல்லை. ராஜதந்திர பேச்சு வார்த்தை மட்டுமே முன்னோக்கிச் செல்லும் ஒரே பாதை. ஒரே நம்பிக்கை அமைதி” என்றார்.