• June 22, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என் உறவினருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் ஆஞ்சியோகிராம் செய்தார்கள். அதில் அவருக்கு 100 சதவிகித அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர். 

‘ஸ்டென்ட் வைக்கலாமே, எதற்கு ஆபரேஷன்’ என்கிறார் நண்பர் ஒருவர். ஸ்டென்ட் என்பது தற்காலிகமானது, பைபாஸ்தான் நிரந்தரமானது என்ற அபிப்ராயமும் இருக்கிறது.  இவை எல்லாவற்றையும்விட 100 சதவிகித அடைப்பை சரிசெய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருக்கிறது. இந்தச் சந்தேகங்களுக்கு விளக்கம் தருவீர்களா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

அருண் கல்யாணசுந்தரம்

ஆஞ்சியோகிராம் என்பது ஒரு நோயாளிக்கு சிகிச்சை தேவையா, வேண்டாமா என்பதைச் சொல்லாது. ஒரு நபருக்கு மாடிப்படிகளில் ஏறி, இறங்க முடியவில்லை, மூச்சு வாங்குகிறது, அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது என அறிகுறிகளை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் சிறப்பான தீர்வுகள் உள்ளன. 

இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த அடைப்பு 70 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும்போது லேசர், ஸ்டென்ட், பலூன் சிகிச்சை போன்ற ஏதேனும் ஒன்று தேவைப்படலாம். 30-40 சதவிகித அடைப்பில்  இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படாது. ஓய்விலிருக்கும்போதும் சரி,  வேகமாக நடக்கும்போதும் பாதிக்கப்படாது. இதயத்துக்கு கூடுதல் ரத்த ஓட்டம் சேரும்போதுதான் ஆக்ஸிஜன் அளவும் அதிகரிக்கும்.  சரி, 30 சதவிகிதம் இருக்கும்போதே அதை பூஜ்ஜியமாக்கிவிடலாம்தானே என நினைக்கத் தோன்றும்.  ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. 70 சதவிகிதத்தை தாண்டும்போதுதான்  அறிகுறிகளையே உணர்வோம். 

70 சதவிகித அடைப்பிலும் நீரிழிவு உள்ளவர்களுக்கும், பெண்களுக்கும் அறிகுறிகள் தெரியாமலே இருக்கலாம். ஒருவர் நடந்தால்தான் அறிகுறிகளை உணர்வார்.  அந்த நபருக்கு மூட்டுவலி காரணமாக, வெளியே நடப்பதே இல்லை, வீட்டுக்குள் மெதுவாக நடக்கிறார் என்றால் அவருக்கு 80 சதவிகித அடைப்பு இருந்தாலும் நெஞ்சு வலியே தெரியாது. அந்த நிலையில்தான் சிகிச்சையே தேவைப்படும்.

பைபாஸ் சிகிச்சைதான் நிரந்தரமானது, ஸ்டென்ட் பொருத்துவதென்பது தற்காலிகமானது என்றெல்லாம் சொல்லப்பட்டது அந்தக் காலம்.

70 சதவிகித அடைப்பிலும், முதலில் மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகளையே பரிந்துரைப்பார்கள். அதற்கும் கட்டுப்படாத நிலையில்தான் அடுத்த சிகிச்சை பற்றி யோசிப்போம். அந்த நிலையிலும் எத்தனை அடைப்புகள், எந்தெந்த இடங்களில் உள்ளன என்பதைப் பார்த்துதான் முடிவெடுப்போம்.  எவ்வளவு சிக்கலான அடைப்பாக இருந்தாலும், அது எந்த இடத்தில் இருந்தாலும், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் உதவியுடன் அடைப்பைத் திறக்க முடியும். அது 100 சதவிகித அடைப்பாக இருந்தாலும் திறக்க முடியும். சில நேரங்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது சம்பந்தப்பட்ட நோயாளிக்கு சரியானதாக இருக்கலாம். சில நேரங்களில் ஸ்டென்ட் வைப்பது சரியான முடிவாக இருக்கலாம்.

பைபாஸ் சிகிச்சைதான்  நிரந்தரமானது, ஸ்டென்ட் பொருத்துவதென்பது தற்காலிகமானது என்றெல்லாம் சொல்லப்பட்டது அந்தக் காலம். சம்பந்தப்பட்ட நபருக்கு எது தேவை, அவரது நோயின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்தே எந்தச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பது முடிவு செய்யப்பட வேண்டும். எனவே, தேவையற்ற ஆலோசனைகளைக் கேட்டுக் குழம்பிக் கொண்டிருக்காமல், மருத்துவர் சொல்வதை மட்டும் கேளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *