
பாட்னா: முதியோர், மாற்றுத் திறனாளிகள் உட்பட குறிப்பிட்ட பிரிவினருக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிஹார் மாநிலத்தில் ரூ.5,736 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணியின் காட்டாட்சி நடத்தியவர்களிடம் இருந்து மீட்கப்பட்டதால் பிஹார் மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது. முதல்வர் நிதிஷ்குமார் சிறந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கு நடைபோடுகிறது. அதற்கு பிஹார் மாநிலத்தின் பங்களிப்பு மிகப்பெரிதாக இருக்கும்’’ என்று பாராட்டினார்.