
புதுடெல்லி: சத்தீஸ்கரின் கங்கேர் மாவட்டம் அமதோலா கல்பார் எனும் மலைப்பாங்கான வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு சிஆர்பிஎப் வீரர்கள் விரைந்து சென்றனர். அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி நக்சலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில், பிஎல்ஜிஏவின் பெண் நக்சலைட் சாந்தி என்ற தேவ் உயிரிழந்தார். இவரை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து எஸ்.பி. இந்திரா கல்யாண் எலிசேலா கூறுகையில், ‘‘மாவட்ட ரிசர்வ் படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினரின் நம்பகமான தகவலைப் பெற்ற பிறகு, கூட்டு பாதுகாப்புப் படையினர் முற்றுகையிட்டனர். அப்போது நடந்த என்கவுன்ட்டரில் பிஜப்பூர் மாவட்டம் குண்டேமில் வசித்த சாந்தி என்ற தேவ் என்பவரும் உயிரிழந்தார். இவர் கரியாபந்த் மாவட்டத்தின் நக்சலைட்டுகளின் கோப்ரா குழுவில் மிக முக்கியமானவராக இருந்தவர்’’ என்றார்.