
யோகா பயிற்சியால் உடல் நலம் மட்டுமின்றி, மனநலனும் பாதுகாக்கப்படும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் நேற்று 11-வது ஆண்டு மெகா யோகா சாதனை நிகழ்வு நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார். வேலம்மாள் கல்வி குழுமத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். இதில், ஆளுநர் யோகா பயிற்சியில் பங்கேற்றதுடன், 47 வகையான யோகாசனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, மாணவர்களுக்கு செய்து காட்டினார். தொடர்ந்து, மாணவர்களுடன் உடற்பயிற்சி, தண்டால் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, தொடர்ச்சியாக 51 தண்டால்களை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.