
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, யோகாசனங்கள் செய்தார். இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உலகில் அமைதி நிலவ, ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நாடும், சமுதாயமும் யோகாவை தங்கள்வாழ்வில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் 11-வது ஆண்டு சர்வதேச யோகா தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா தின விழாநடைபெற்றது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.