
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வி.கோவில்பத்து செங்கல்சூலையில் பணிபுரியும் செய்யதுங்கநல்லூர் மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 18ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது நெல்லை அருகே உள்ள வல்லநாடு நான்கு வழிச்சாலை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்தத் தகவல் அறிந்து முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த சங்கர் குமார் மற்றொரு காவலர் உடன் சம்பவ இடத்திற்குச் சென்று ரமேஷ் குமாரைச் சிகிச்சைக்காக 108 வாகனத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
இந்த மீட்புப் பணியின் போது பாலத்தின் சுவர் அருகே நின்று கொண்டிருந்த தென்காசி மாவட்டம் கீழகழுநீர்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் குமார் பாலத்திலிருந்து 50 அடி ஆழத்தில் உள்ள ஆற்றில் விழுந்ததில் காயம் அடைந்தார்.
ஆற்றில் தண்ணீர் இல்லாத பாறை பகுதியில் விழுந்ததால் அவர் பலத்த காயமடைந்தார். பின் உடன் வந்த காவல்துறை அதிகாரி அவரைச் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரது சொந்த ஊரான கீழகழுநீர்குளத்தில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கு நடைபெற்றது.

முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் நிவாரணம்
விபத்தில் காயமடைந்தோரை மீட்கச் சென்ற காவலர் இறந்தது வருத்தம் அளிக்கிறது என முதல்வர் இரங்கல் தெரிவித்தவுடன், தனது பொது நிவாரண நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாயை அவரது குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்கியுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள செய்திக் குறிப்பில், “காவலர் சங்கர் குமார் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
சங்கர் குமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் மற்றும் அவருடன் பணிபுரிந்த காவலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கும் 30 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.