• June 21, 2025
  • NewsEditor
  • 0

ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் வலுபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா மௌனமாக இருப்பது வெளியுறவு செயல்பாடுகளின் தவறைக் காட்டுவதாகவும், இந்தியாவின் தார்மீக மற்றும் போர்த்திறம்சார்ந்த மரபுக்கு முடிவுகட்டுவதாகவும் தி இந்து தளத்தில் எழுதியுள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி.

மேலும் காங்கிரஸின் நிலைப்பாட்டை உறுதிபடுத்தும் விதமாக, இஸ்ரேல் ஜூன் 13ம் தேதி ஈரானைத் தாக்கியது சட்டவிரோதம் மற்றும் இறையாண்மையை மீறும் செயல் எனக் கண்டித்துள்ளார் சோனியா காந்தி.

“ஈரான் மண்ணில் குண்டுகள் போடப்பட்டதையும், குறிவைத்து நடத்தப்பட்ட படுகொலைகளையும் காங்கிரஸ் கண்டித்துள்ளது. இவை பிராந்திய மற்றும் உலகளாவிய ஆபத்தாக விரிவடையும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

காசாவில் நடைபெறும் கொடூரமான செயல்பாடுகள் உட்பட இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கைகளுடன், இந்த தாக்குதலும் பொதுமக்களின் உயிர்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து அக்கறை இல்லாமல் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் பிராந்தியத்தில் நிலையற்றத் தன்மையை ஆழமாக்கி, மேலும் மோதலுக்கு வழிவகுக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி.

இஸ்ரேலின் தாக்குதல் ஈரான் – அமெரிக்கா இடையே நடைபெற்ற நம்பிக்கையளிக்கும் ராஜாந்திர பேச்சுவார்த்தைகளை மோசமடையச் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறையின் இயக்குநர் துளசி கப்பார்ட் மார்ச் 2025ம் தேதி ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் இல்லை எனவும் 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்ட பிறகு உச்ச தலைவரான் அலி காமேனி அதற்கு அனுமதியளிக்கவில்லை எனவும் கூறியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார் சோனியா காந்தி.

நெதன்யாகு

ட்ரம்ப், நெதன்யாகுவை விமர்சித்த சோனியா காந்தி!

மேலும் தற்போதைய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமைதியைப் பொருட்படுத்தாதவர் என்றும் தீவிரவாதத்தை வளர்ப்பவர் என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர். இஸ்ரேல் சட்டவிரோதமாக எல்லையை விரிவுபடுத்துவது, பாலஸ்தீனத்தில் நீண்ட கால மோதலை உருவாக்கியது போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி.

“1995ஆம் ஆண்டு பிரதமர் யிட்ஸ்ஹாக் ரபினின் படுகொலையில் உச்சமடைந்த வெறுப்பின் தீப்பிழம்புகளைத் தூண்டிவிட்டு இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மிகவும் நம்பிக்கைக்குரிய சமாதான முயற்சிகளில் ஒன்றை நெதன்யாகு முடிவுக்குக் கொண்டுவந்தார் என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது” என எழுதியுள்ளார் சோனியா காந்தி.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டுமென்று இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பேசியதைச் கண்டிக்கும் விதமாக, “ஒருகாலத்தில் அமெரிக்காவின் முடிவில்லாப் போர்களுக்கும், இராணுவ-தொழில்துறை வளாகத்தின் செல்வாக்குக்கும் எதிராக பேசிவந்த டொனால்ட் ட்ரம்ப் தற்போது அழிவின் பாதையில் செல்ல விரும்புகிறார்” எனக் குற்றம்சாட்டியுள்ளார் சோனியா.

ட்ரம்ப் – நெதன்யாகு

மேலும் ட்ரம்ப் தனது சொந்த உளவுத்துறை தலைவரின் கூற்றைப் புறந்தள்ளி, உண்மைக்கு மாறான, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் பொய்யின் அடிப்படையில் இயங்குவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இஸ்ரேல் – ஈரானுடன் இந்தியாவின் உறவும் இந்தியாவின் பொறுப்பும்

“ஈரான் இந்தியாவுடன் நீண்டகால நண்பராக இருந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு, காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியாவை விமர்சிக்கும் தீர்மானத்தைத் தடுக்க ஈரான் உதவியது. ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்துள்ளது. 1965 மற்றும் 1971 போர்களில் பாகிஸ்தானை ஆதரித்த ஈரான் ஏகாதிபத்திய அரசை ஒப்பிடுகையில் ஈரான் இஸ்லாமிய குடியரசு இந்தியாவுக்கு கூடுதலாகவே ஒத்துழைப்பு வழங்கிவருகிறது

“மறுபுறம் இஸ்ரேலும் இந்தியாவும் சமீபத்திய ஆண்டுகளில் நல்ல உறவுகளை வளர்த்துள்ளன.

இந்த தனித்துவமான சூழல், நம் நாட்டுக்கு பதற்றத்தைத் தணிக்கவும் அமைதியை உருவாக்கும் பாலமாக செயல்படவும் தார்மீக பொறுப்பை வழங்குகிறது.

இது வெறுமனே ஒரு சுருக்கமான கொள்கை அல்ல. பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மேற்கு ஆசியாவில் வசித்தும் பணியாற்றியும் வருகிறார்கள், இதனால் அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டியது நமது தேசிய நலனுக்கான பிரச்னையாகிறது.” என்று எழுதியுள்ளார் சோனியா காந்தி.

இந்தியாவின் கொள்கையை மோடி அரசு கைவிட்டுவிட்டது!

இஸ்ரேல் மீது 2023, அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை காங்கிரஸ் சந்தேகத்துக்கிடமின்றி கண்டித்தாலும் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேலின் கொடூரங்களைக் கண்டு நாம் மௌனமாக இருக்க முடியாது எனக் கூறியுள்ளார் சோனியா காந்தி.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த மனிதாபிமான பேரழிவு நடைபெற்றுக்கொடிருக்கும்போது, இஸ்ரேலுக்கு அருகில் பரஸ்பர கண்ணியத்துடன் சுதந்திர பாலஸ்தீனம் வாழ்வதை ஊக்கப்படுத்தும் அமைதியான இரு-நாட்டு தீர்வுக்கான இந்தியாவின் நீண்டகால கொள்கை ரீதியான பற்றுதலை நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் கைவிட்டுவிட்டது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

“இந்தியா பொறுப்புடன் செயல்பட வேண்டும்”

மேலும் அவர், “காசாவில் நிகழும் பேரழிவு மற்றும் தற்போது ஈரானுக்கு எதிராக தூண்டப்பட்டுள்ள போர் பதற்றம் குறித்து இந்திய அரசு மௌனமாக இருப்பது, நமது தார்மீக மற்றும் தூதரக பாரம்பரியங்களில் இருந்து விலகியுள்ளதைக் காட்டுகிறது. இது நாம் நம் குரலை இழந்தது மட்டுமல்லாமல் நம் விழுமியங்கள் சரணாகதி அடைந்துவிட்டதையும் வெளிப்படுத்துகிறது.” என எழுதியுள்ளார்.

இன்னும் தாமதமாகிவிடவில்லை எனக் கூறும் சோனியா காந்தி, “மேற்கு ஆசியாவில் பதட்டங்களைத் தணிக்கவும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதை ஊக்குவிக்கவும் இந்தியா தெளிவாகப் பேச வேண்டும், பொறுப்புடன் செயல்பட வேண்டும், கிடைக்கக்கூடிய ஒவ்வொரு ராஜதந்திர வழியையும் பயன்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *