
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “அமித்ஷாவின் உளறல்களுக்கு எல்லையே இல்லை. ஆங்கிலம் உலக மொழி. ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுகளுக்கும் சென்று வரலாம்.
அதன் காரணமாகத்தான் பேரறிஞர் அண்ணா தாய் தமிழும், ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டில் இருக்கும் என்று கூறினார்.
பாஜக ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் இந்தியா என்று அழைக்கக்கூடாது ‘பாரத்’ என்றுதான் அழைக்க வேண்டும், டெல்லிக்குப் பதில் வாரணாசியைத் தலைநகராக மாற்ற வேண்டும், இந்தியும் சமஸ்கிருதம் மட்டும்தான் இந்தியா முழுவதும் பரப்பப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்கிறார்கள்.
2017-ம் ஆண்டு திமுகவுடன் கரம் கோர்ப்பது என்று எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கான அவசியம் தற்போது இல்லை.
இதைப் பற்றி ரகசியமாகப் பேசுகிற பழக்கம் எங்களுக்கு இல்லை. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய உளவுத்துறை ஆகியவற்றை இந்துத்துவாவைத் திணிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அதிமுக வலிமையோ, உரமோ இல்லாத கூட்டமாக மாறிவிட்டது. நயினார் நாகேந்திரன் நல்ல நண்பர். பாஜக மாநில தலைவரான வந்த பிறகு அவர் பொருத்தமற்ற முறையில் கற்பனையாகப் பேசி வருகிறார். இதனை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும்.
பாஜக கட்சிக்குள்ளேயே பல்வேறு குழப்பங்களும், பிரச்னைகளும் நிலவி வருகின்றன. பாமக ஒரு வலுவான கட்சி. தற்போது உள்கட்சி பிரச்னை நிலவி வருகிறது.
இதுகுறித்து ராமதாஸ் மற்றும் அன்புமணி அவரவர் கருத்துக்களைக் கூறி விட்டார்கள். அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இது காலப்போக்கில் சரியாவதற்கான வாய்ப்பு உள்ளது. அதைப்பற்றி நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. பாஜக யார் யாரையெல்லாம் தங்கள் பக்கம் அழைக்க முடியும் என்று நினைக்கிறார்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி குறித்து திமுக தலைமைதான் முடிவு செய்யும்.” என்றார்.