
விமான பாதுகாப்பைக் கண்காணிக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation – DGCA) டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் அதன் 3 அதிகாரிகளை அனைத்து பதவிகள் மற்றும் பொறுப்புகளிலிருந்தும் முற்றிலுமாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 20ம் தேதி DGCA பிறப்பித்த ஆணயில், தேதி ஒரு டிவிஷனல் துணைத் தலைவர் (Divisional VP) உள்ளிட்ட இந்த மூன்று அதிகாரிகளும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முற்றிலுமாக தோற்றுள்ளனர் எனக் குற்றம்சாட்டியதோடு, இவர்கள் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
DGCA உத்தரவில், விமானக் குழுவினர் பணிநேரங்களைத் திட்டமிடுவதிலும், உரிமங்களில் உள்ள குறைபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டது, ஓய்வு அளிப்பது மற்றும் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்றவற்றிலும் கடுமையான விதிமீறல்களை ஏர் இந்தியா நிறுவனம் தானாக முன்வந்து அறிவித்ததாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

குழுவினரை பணியமர்த்துதல் மற்றும் விமானங்களை திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு ஏர்லைன்கள் பயன்படுத்தும் ARMS என்ற மென்பொருளிலிருந்து, CAE Flight-க்கு மாற்றியப் பிறகு செய்யப்பட்ட மதிப்பாய்வில் இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
இந்த விதிமீறல்களுக்கு காரணமான, தங்களது பொறுப்பை சரியாகச் செய்யாத அதிகாரிகளுக்கு எதிராக Air India நிறுவனம் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது DGCA.
மேலும் எதிர்காலத்தில் இதேப்போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் விமானம் இயக்குவதற்கான உரிமத்தை இடைநீக்கம் செய்வது, செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில், தற்போது வெளிவந்துள்ள நிறுவனத்தின் நீண்ட கால அலட்சியப்போக்கு கவனம் பெறுகிறது.