
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு தனியார் நிறுவன டெலிவரி ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்யும் இந்தப் பெண், கடந்த மே 13-ம் தேதி மதியம், மளிகைப் பொருள்களை தனியார் டெலிவரி ஆப்பில் ஆர்டர் செய்துள்ளார். இதை டெலிவரி செய்ய வந்த கோபிநாத் என்னும் டெலிவரி ஊழியர், அந்தப் பெண் தனியாக இருப்பதை அறிந்திருக்கிறார். அவர் தனது செல்போனில் சார்ஜ் இல்லை என்று கூறி, அந்தப் பெண்ணின் வீட்டில் செல்போன் சார்ஜ் செய்ய அனுமதி கேட்டுள்ளார்.
அந்தப் பெண் அனுமதி கொடுத்துவிட்டு, சமையலறைக்குச் சென்றப்போது, ‘நான் உதவி செய்யட்டுமா?’ என்று அந்த டெலிவரி நபர் கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்தப் பெண், டெலிவரி ஊழியரின் செல்போனைப் பார்க்க, அதில் சார்ஜ் இருந்திருக்கிறது. இதனால், டெலிவரி ஊழியரை வெளியே போகச் சொல்லியிருக்கிறார்.
அப்போது டெலிவரி ஊழியர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட டெலிவரி நிறுவனத்திடம் அந்தப் பெண் புகாரளித்தும், கோபிநாத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, அந்தப் பெண் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் கோபிநாத்தை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.