
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து நான் ஏற்கெனவே விளக்கம் கொடுத்து விட்டேன்.
முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் தெளிவான விளக்கம் கொடுத்து விட்டார். அதற்காக அதிமுக ஆட்சியில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து நேற்றே விளக்கம் அளித்துவிட்டோம்.
ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விரும்பும் கடவுள்களை வழிபடுவது ஜனநாயக உரிமை. அந்த அடிப்படையில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என அமித் ஷா சொல்லியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து.

அதேநேரத்தில் அனைவருக்கும் தாய் மொழி முக்கியம் என்பதையும் அவர் கூறியுள்ளார். தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் பேசியுள்ளார்.
திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருக்கிறது. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் மறைப்பதற்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தும், அவதூறு தகவல்ககளை பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதற்கு எல்லாம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த தண்டனையை அவர்களுக்கு பரிசாக வழங்குவார்கள். யோகா உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது. பிரதமர் யோகாவை முன்னெடுத்து செல்வதற்கு என் வாழ்த்துகள்.” என்றார்.