• June 21, 2025
  • NewsEditor
  • 0

மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுவிட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிடும். எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, மும்பை ரயில்வே-க்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.

ரயில் பயணிகளின் வசதிக்காக அனைத்து ரயில் நிலையங்களிலும் நகரும் படிக்கட்டுகள், தேவையான நடைமேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் தண்டவாளத்தைக் கடப்பது குறைந்து இருக்கிறது.

ஆனால் ரயில் விபத்துக்கள் மூலம் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் இறப்பது மட்டும் குறையவில்லை. கடந்த 9ம் தேதி மும்பை அருகில் உள்ள மும்ப்ரா என்ற இடத்தில் பயணிகள் அளவுக்கு அதிகமாக ரயில் வாசலில் தொங்கியபடி பயணம் செய்து, தவறி கீழே விழுந்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரயில்வே

9 பேர் காயம் அடைந்தனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் பயனளிக்காமல் இருக்கிறது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் யதின் யாதவ் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு நீதிபதிகள் அலோக் மற்றும் சந்தீப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இம்மனு மீதான விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ”மும்ப்ராவில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது.

ரயில்வே நிர்வாகம் தாக்கல் செய்திருக்கும் அறிக்கைப்படி கடந்த ஆண்டு மட்டும் மத்திய மற்றும் மேற்கு ரயில்வேயில் 3588 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக 10 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.

ரயில் வாசலில் பயணம் செய்து அல்லது ரயில் தண்டவாளத்தைக் கடந்து அல்லது ரயில்வே மின்கம்பத்தில் அடிபட்டு எனப் பல்வேறு காரணத்தால் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன.

முந்தைய ஆண்டை விட உயிரிழப்புகள் குறைவு என்று ரயில்வே அறிக்கை கூறுகிறது. 2009ம் ஆண்டை ஒப்பிடுகையில் இப்போது 46 சதவீதம் உயிரிழப்புகள் குறைந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளீர்கள். ஆனால் இது போதுமானது கிடையாது” என்று கூறியுள்ளது.

ரயில்வே
ரயில்வே

மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அனில் சிங், ”ரயில் விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க உயர்மட்ட கண்காணிப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே நெட்ஒர்க்கை ரயில்வே நிர்வாகம் மேம்படுத்தி வருகிறது.

ஆனால் பணிகளை இரவு நேரத்தில் மட்டுமே செய்ய முடிகிறது. ரயில் போக்குவரத்தை நிறுத்தினால் மும்பை ஸ்தம்பித்து விடும். ரயில் தண்டவாளத்தைக் கடந்து பயணிகள் உயிரிழப்பதைத் தடுக்க இரு தண்டவாளம் இடையிலும், தண்டவாளத்திற்கு வெளியிலும் தடுப்புகள் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த உணவகங்கள் மற்றும் கடைகளை அகற்றுவது உட்படப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதில் திருப்தியடையாத நீதிபதிகள், ”ரயில்களில் தானியங்கி கதவுகளைப் பொருத்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். தானியங்கி கதவு இருந்திருந்தால் மும்ப்ரா சம்பவம் நடந்திருக்காது.

நீங்கள் (ரயில்வே) எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானது கிடையாது. ரயில் கிளம்பும்போது பூட்டிக்கொள்ளும் வகையில் தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும். இது தொடர்பாக விரிவான அறிக்கையை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்யவேண்டும்” என்று நீதிபதிகள் கூறினர்.

“ரயில்களில் தானியங்கி கதவு பொருத்துவது தொடர்பான திட்டம் பரிசீலனையில் இருக்கிறது” என்று அரசு வழக்கறிஞர் அனில் சிங் தெரிவித்தார்.

Railways
Railways

கடந்த ஆண்டு ரயில் தண்டவாளத்தில் தொங்கியபடி பயணம் செய்து 570 பேர் உயிரிழந்திருந்தனர். ரயில் தண்டவாளத்தைக் கடந்து 1151 பேர் இறந்திருக்கின்றனர். இந்த உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த அனைத்து ரயில் நிலையத்திலும் நகரும் படிக்கட்டுகள் மட்டுமல்லாது லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் அவசரத்திற்குப் பயணிகள் ரயில் தண்டவாளத்தைக் கடந்து தங்களது உயிரை இழக்கின்றனர். உலகில் டோக்கியோவிற்கு அடுத்தபடியாக அதிக பயணிகள் நெருக்கடியுள்ள ரயில் நிலையமாக மும்பை இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *