
புதுடெல்லி: இன்று ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, உ.பி.யின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘ஒய்-பிரேக்' எனும் பெயரில் அனைவருக்கும் யோகா செய்வதற்கான நேரம் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உ.பி. அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: யோகா நெறிமுறையை அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த வேண்டும். இந்த முயற்சி இந்தியாவின் யோகா பாரம்பரியத்தை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், யோகாவை தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றும். இதன் மூலம் மன அழுத்தமில்லாத, ஆரோக்கியமான பணிச்சூழலையும் ஊக்குவிக்கும்.