
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
ஒவ்வொரு பயணியின் இதயத்திலும் ஒரு கனவு உறங்குகிறது. ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது நான்கு நண்பர்களுக்கு, அவர்களது குடும்பத்தினருடன், அந்தக் கனவு காஷ்மீர் பூமியின் சொர்க்கம். பல மாதங்களாகத் திட்டமிட்ட அந்தப் பயணம் இறுதியாக உயிர்பெற்றது.
சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு என வெவ்வேறு நகரங்களில் இருந்து ஐந்து குடும்பங்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஒன்று கூடினோம். உற்சாகம் தாங்க முடியவில்லை. பெங்களூரு நகர ரயில் நிலையத்தைப் போல சிறியதாக இருந்த ஸ்ரீநகர் விமான நிலையத்தில், “பூமியின் சொர்க்கத்திற்கு வரவேற்கிறோம்” என்ற பலகை எங்களை அரவணைத்தது. எங்கள் பயண ஏஜென்ட் ஒரு டெம்போ ட்ராவலர் வேனுடன் தயாராகக் காத்திருந்தார்.
தல் ஏரியில் ஒரு மாய இரவு
நேராக தல் ஏரிக்குப் பயணமானோம். அன்று இரவு, ஏரியில் மிதக்கும் ஹவுஸ்போட்டில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீநகர் ஒரு பரபரப்பான நகரமாகத் தோன்றியது, ஆனால் எங்கு பார்த்தாலும் ராணுவ மயம். ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு ராணுவ வீரர், துப்பாக்கியுடன் சாதாரணமாக நின்றிருந்தார். கடைகள், விடுதிகள், வீடுகள் என ஸ்ரீநகர் உயிர்ப்புடன் துடித்தது. ஒரு சிறிய படகில் பயணித்து, எங்கள் ஹவுஸ்போட்டை அடைந்தோம். இரண்டு ஹவுஸ்போட்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.

சூடான ரொட்டி, பாஸ்மதி சாதம், தால் என அறுசுவை விருந்து காத்திருந்தது. காஷ்மீரியர்களின் விருந்தோம்பல், இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் சளைத்ததல்ல என்பதை ஒவ்வொரு சிறு நடவடிக்கையிலும் உணர முடிந்தது.
காவாவும் குல்மார்க்கும்
மறுநாள் காலை, சிறு படகில் ஒருவர் காஷ்மீரின் பாரம்பரிய பானமான காவாவை விற்று வந்தார். அந்த வித்தியாசமான, சூடான பானத்தை ருசித்தோம். பின்னர், காஷ்மீரின் முத்து எனப் போற்றப்படும் குல்மார்க்கிற்குப் பயணமானோம். இமயமலையின் பீர்பஞ்சல் மலைத்தொடரில், 2,650 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்த அழகிய பள்ளத்தாக்கு, கண்டோலா கேபிள் கார் மூலம் அணுகப்படுகிறது. கோடை காலம் என்பதால் பனி சற்று குறைவாகவே இருந்தது. கண்டோலா ரைடு இரண்டு கட்டங்களாக—பேஸ் 1 மற்றும் பேஸ் 2—பிரிக்கப்பட்டிருந்தது. குளிர்காலத்தில் பேஸ் 2 பனி காரணமாக மூடப்படும்.



வாடகைக்குக் கிடைத்த பூட்ஸ், ஜாக்கெட், கையுறைகளை அணிந்து, கேபிள் காரில் பயணித்தோம். வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல பனி படர்ந்த மலைகளைக் கண்டு மனம் குதூகலித்தது. பெரியவர்கள் கூட குழந்தைகளாக மாறி, பனியில் ஆடி, பாடி, விளையாடினோம். சூடாக மேகி நூடுல்ஸ் தயாரித்துக் கொடுத்தார்கள்; அதையும் ருசித்தோம்.
அதிர்ச்சியளித்த பகல்காம் தாக்குதல்
குல்மார்க்கிலிருந்து கீழே இறங்கியதும், மொபைல் சிக்னல் கிடைத்தவுடன், பகல்காம் தாக்குதல் பற்றிய செய்தி வந்தது. அப்படியே உறைந்து போனோம். அடுத்த நாள் காலை, பகல்காமில் ஒரு ஹோட்டலில் செக்-இன் செய்ய திட்டமிட்டிருந்தோம். அடுத்த இரண்டு நாள்கள் பகல்காமில் செலவிடுவதாக இருந்தது. ஒரு நாள் தாமதமாக இந்தத் தாக்குதல் நடந்திருந்தால், எங்கள் நிலை என்னவாகியிருக்கும்? நினைக்கவே உடல் நடுங்கியது. அடுத்த நாள் பயணத் திட்டங்களை மாற்றுவது குறித்து விவாதத்தில் மூழ்கினோம். அதே சமயம் அங்கு உயிரிழந்தவர்களை எண்ணி மனம் அடுத்தக்கட்டத்தை யோசிக்க மறுத்தது. உறவினர்கள், நண்பர்களிடமிருந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் விடாமல் வந்தன. “உடனே திரும்பி வாருங்கள்” என்று பெற்றோர்களின் அறிவுறுத்தல்கள் எங்களைத் தொந்தரவு செய்தன.

ஸ்ரீநகரில் ஒரு நாள்
மறுநாள் காலை, பகல்காம் பயணத்தை ரத்து செய்து, ஸ்ரீநகரிலேயே உள்ளூர் கோயில்கள், பூங்காக்களைப் பார்வையிட்டோம். காஷ்மீரி உடைகள் அணிந்து, குடும்பமாகப் புகைப்படங்கள் எடுத்து, அந்த நாளை இனிமையாகக் கழித்தோம். அடுத்த நாள், திட்டமிட்டபடி சோனமார்க்கிற்குப் பயணமானோம். எங்கள் வேன் ஓட்டுநர், தனக்குத் தெரிந்த உணவு விடுதிகள், கடைகளில் அவ்வப்போது நிறுத்துவார். இணையம் மற்றும் காஷ்மீர் சென்றவர்களிடம் முன்கூட்டியே சேகரித்த தகவல்களால், விலை மற்றும் தரம் குறித்து உஷாராக இருந்தோம். இதுபோன்ற ஓட்டுநர்கள் கடைகளுடன் இணைந்து செயல்படுவது பற்றி விழிப்புணர்வுடன் இருந்தது அவசியமாக இருந்தது.
சோனமார்க்கின் அழகு
சோனமார்க்கில், பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய சுரங்கப் பயணம் குதூகலமாக இருந்தது. ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் பார்த்த சுரங்கங்களைப் போலவே இந்தியாவிலும் ஒரு சுரங்கம் இருப்பது பெருமையாக இருந்தது. குதிரை சவாரி மூலம் மலைகளில் பயணித்தது புது அனுபவமாக அமைந்தது. குல்மார்க்கின் அழகுக்கு ஈடாக இல்லாவிட்டாலும், சோனமார்க்கில் குதிரை சவாரி மகிழ்ச்சியைத் தந்தது.

ஸ்ரீநகரின் இதயம்
அடுத்த நாள்களை ஸ்ரீநகரில் செலவிட்டோம். சங்கராச்சாரியார் கோயிலுக்கு சென்றோம், அங்கிருந்து ஸ்ரீநகரின் முழு வான்வெளிக் காட்சி கண்களுக்கு விருந்தளித்தது. முகல் தோட்டங்களில் துலிப் பூக்கள் மழையால் சேதமடைந்திருந்தது வருத்தமளித்தாலும், மீதமிருந்த பூக்களைப் பார்த்து ஆறுதல் அடைந்தோம்.
பகல்காம் : ஒரு தைரியமான பயணம்
கடைசி நாளில், மனம் தளராமல் பகல்காமுக்குச் சென்றோம். வழியில் ராணுவ வீரர்கள் உற்சாகமாக வரவேற்றனர். திட்டமிட்டபடி ஏ, பி, சி பள்ளத்தாக்குகளுக்குச் செல்ல முடியவில்லை என்றாலும், ‘லியோ’ படப்பிடிப்பு இடங்களான சங்கரா கோயில், சிப்பார் கஃபே ஆகியவற்றிற்கு சென்றோம்.




வழியில் ஒரு ஆப்பிள் தோட்டத்தில் குடித்த ஆப்பிள் ஜூஸ், இதுவரை அருந்தாத அற்புத சுவையைத் தந்தது. அருகில் இருந்த விக்கர் பேக் தொழிற்சாலைகளில் சிலர் நினைவுப் பரிசுகளாகப் பைகளை வாங்கினோம். மீண்டும் தல் ஏரிக்கு வந்து, சிகாரா படகு சவாரி செய்தோம். சூரிய அஸ்தமனத்தில் தங்கம்போல ஜொலித்த ஏரியில், மிதக்கும் கடைகள், அஞ்சல் நிலையம் என ஒரு சுற்று வந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
ஷாப்பிங் மற்றும் விடைபெறுதல்
லால் சவுக்கில் ஷாப்பிங் செய்தோம். காஷ்மீரி வேலைப்பாடு செய்யப்பட்ட புடவைகள், சுடிதார்கள், துப்பட்டாக்கள், கைவினைப் பொருட்கள் என காஷ்மீரின் அழகை பைகளில் அடைத்தோம். குங்குமப்பூ, வால்நட்ஸ், காவா மிக்ஸ் ஆகியவற்றை முன்பே அவந்திபோராவில் வாங்கியிருந்ததால், இங்கு அவை தேவைப்படவில்லை. ஸ்ரீநகரின் ஐகானிக் டைம் ஸ்கொயர் மணிக்கூண்டு முன்பு செல்ஃபி எடுத்து, காஷ்மீருக்கு விடை கொடுத்தோம்.

மறுநாள் காலை, ஹோட்டலை விட்டு வெளியேறி, விமான நிலையத்திற்கு முன்கூட்டியே வந்து, எங்கள் காஷ்மீர் பயணத்தை இனிதே முடித்தோம். அழகு, ஆபத்து, அன்பு, அனுபவங்கள் என எல்லாம் கலந்த இந்தப் பயணம், எங்கள் இதயங்களில் என்றென்றும் நீங்காத இடம் பிடித்தது.
– பூர்ணா ஶ்ரீனிவாஸ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.