
தென்காசி மாவட்டம் வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் மற்றும் புனிதா தம்பதி. இவர்களுடைய இரண்டரை வயது ஆண் குழந்தை நேற்று இரவு வீட்டின் முன்பு தனது தாயுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.
அப்போது திடீரென குழந்தை மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளது. பதற்றமடைந்த உறவினர்கள் குழந்தையை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவலைக் கேட்ட உறவினர்களுக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
மர்மமான முறையில் இறந்த இரண்டரை வயது குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து குருவிகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.