• June 20, 2025
  • NewsEditor
  • 0

Pஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர், தன்னைப்போன்ற வீராங்கனைகளை மகளிர் கிரிக்கெட்டில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிசிசிஐ மற்றும் ஐசிசி-க்கு தனது மருத்துவ அறிக்கைகளைப் பகிரங்கமாக வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.

லண்டனில் உள்ள மான்செஸ்டர் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழக விளையாட்டு நிறுவனத்தில் எட்டு வார ஆராய்ச்சி திட்டத்தின் பகுதியாக மருத்துவ சோதனைகளில் ஈடுபட்டு அதன் முடிவுகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அனயா பங்கர்

அந்தப் பதிவில் அனயா, “எனது வலிமை, சகிப்புத்தன்மை, ஹிமோகுளோபின் அளவு, குளுக்கோஸ் அளவு மற்றும் உடலின் ஒட்டுமொத்த செயல்திறன் ஆகியவற்றை ஹார்மோன் சிகிச்சை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை மதிப்பிடுவதே நான் மேற்கொண்ட மருத்துவ சோதனையின் முக்கிய குறிக்கோளாகும்.

பிறப்பு முதல் மனதளவிலும் உடலளவிலும் பெண்ணாக இருக்கும் சிஸ்ஜெண்டர் பெண்களுடைய தரவுகளோடு இந்த சோதனைகள் அனைத்தும் நேரடி ஒப்பீடு செய்கிறது.

2025 ஜனவரி முதல் மார்ச் வரை, மூன்று மாதங்களாக எனது ஹார்மோன்களைக் கடுமையாகப் பரிசோதித்து என்னுடைய தரவுகளைச் சேகரித்தனர்.

பின், அவ்வாறு சேகரித்த தரவுகளை மற்ற சிஸ்ஜெண்டர் பெண் விளையாட்டு வீரர்களின் தரவுகளோடு நிபுணர்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

திருநங்கையான எனது சக்தி, வலிமை, உடலின் ஆக்ஸிஜன் அளவு, தசை நிறை மற்றும் நுரையீரல் திறன் ஆகியவை சிஸ்ஜெண்டர் பெண்களது தரவுகளோடு பொருந்துவதைப் பரிசோதனை முடிவுகள் மூலம் கண்டறிந்தனர்.

இந்த முடிவுகளின் அடிப்படையில், பிசிசிஐ மற்றும் ஐசிசி-யுடன் என்னுடன் முறையான உரையாடலைத் தொடங்க வேண்டும்.

மேலும், இதுகுறித்து நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களோடு இணைந்து உரையாடி பயனுள்ள கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

என்னுடைய இந்த அறிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருந்து இந்திய கிரிக்கெட்டில் புரட்சியாக மாறலாம் அல்லது மாற்றங்கள் ஏற்படுத்தாமலும் போகலாம்” எனத் தெரிவித்து இருந்தார்.

ஹார்மோன் சிகிச்சைக்கு முன் ஆர்யனாக அறியப்பட்ட அனயா, தனது பாலினத்தை மாற்றிக்கொண்டாலும் கிரிக்கெட் மீதான தனது இலட்சியத்தைக் கைவிடவில்லை.

கிரிக்கெட்டில் சாதிப்பதற்காகவே இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

சர்வதேச அளவில் மகளிர் கிரிக்கெட்டில், திருநங்கை வீராங்கனைகள் பங்கேற்க ஐ.சி.சி தடை விதித்துள்ளது. சமீபத்தில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும், திருநங்கைகள் நாட்டின் அனைத்து நிலையிலான மகளிர் கிரிக்கெட்டிலும் பங்கேற்கத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *