• June 20, 2025
  • NewsEditor
  • 0

படிப்புக்கும், வேலைக்கும் வயது ஒரு தடை கிடையாது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் சிங்(41). ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் தனது 21 வயது மகனோடு சேர்ந்து போலீஸ் வேலைக்கு தேர்வாகி இருக்கிறார்.

யஷ்பால் கடந்த 2019-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அவரது மகன் சேகர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தனது 18-வது வயதில் இருந்து போலீஸ் வேலையில் சேர முடிவு செய்து தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார்.

யஷ்பால் தனது மகனுக்கு அடிக்கடி இவ்விவகாரத்தில் உதவி செய்ய ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் யஷ்பாலும் சேர்ந்து போலீஸ் வேலைக்கு தயாராவது என்று முடிவானது. இதையடுத்து இருவரும் சேர்ந்து டெல்லியில் உள்ள பயிற்சி அகாடமியில் சேர்ந்து படித்தனர். ஒரே வினாத்தாள்களை இருவரும் சேர்ந்து பிராக்டிஸ் செய்து பார்த்தனர்.

பொது அறிவு தொடர்பான தகவல்களை யஷ்பால் தனது மகனுக்கு கற்று கொடுத்தார். அதேசமயம் கணிதம் தொடர்பான தகவல்களை சேகர் தனது தந்தைக்கு கற்றுக்கொடுத்தார். இது குறித்து சேகர் கூறுகையில்,” ஆரம்பத்தில் ஆன்லைன் வகுப்பில் எனது தந்தையோடு சேர்ந்து கற்றுக்கொள்ள சங்கோஜமாக இருந்தது. அதன் பிறகு அது சரியாகிவிட்டது. இறுதி தேர்வுக்கு ஆறு மாதத்திற்கு முன்பு கடினமாக படித்தோம்.

காலை 10 மணிக்கு உள்ளூர் நூலகத்திற்கு இரண்டு பேரும் சென்றுவிடுவோம். மாலை 4 மணிக்குத்தான் வருவோம். இடையில் சிறிது உணவு இடைவெளி எடுத்துக்கொள்வோம். காலை நேரத்தில் உடற்பயிற்சி எடுத்துக்கொள்வோம். வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தோம்.

தந்தை, மகன்

இரண்டு மாதத்தில் மீண்டும் தேர்வு நடந்தது. அதில் கலந்து கொண்டோம். தேர்வு முடிவு வந்தபோது நாங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தோம்”என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இருவருக்கும் போலீஸ் நியமன ஆணையை முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து வழங்கினார்கள். இருவரும் ஒன்றாக சேர்ந்து படித்து ஒன்றாக தேர்வு எழுதினாலும் பயிற்சி மட்டும் இருவருக்கும் வேறு வேறு இடத்தில் வழங்கப்பட இருக்கிறது.

சேகர் பயிற்சிக்காக பரேலி செல்கிறார். யஷ்பால் ஷாஜஹான்பூரில் பயிற்சி எடுத்துக்கொள்கிறார். போலீஸ் வேலைக்கு ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள தந்தை மகனுக்கு ஊர் மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *