
சென்னை: போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் மோசடி நடந்துள்ளது. தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் ஊதிய விகிதத்தை ஒப்பந்தப்படி நியாயமாகவும் நேர்மையாகவும் போக்குவரத்துக் கழகங்கள் நிர்ணயிக்க வேண்டும்; உழைப்பு மற்றும் ஊதியச் சுரண்டலைக் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 15 ஆம் ஊதிய விகிதத்தின்படி நடப்பு மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவிருக்கும் நிலையில், ஊதியத்தை நிர்ணயம் செய்வதில் திட்டமிட்டு பல மோசடிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதனால், போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்கு மாதம் ரூ.1000 முதல் ரூ.3000 வரை ஊதிய இழப்பு ஏற்படும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியத்தில் கூட சுரண்டும் போக்கு கண்டிக்கத்தக்கது.