குஜராத் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 171 விமானம் கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு கிளம்பியது.
கிளம்பிய கிட்டத்தட்ட 5 நிமிடங்களிலேயே, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் விடுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில் இருந்து 242 பேரில் இங்கிலாந்து குடிமகன் ஒருவர் மட்டும் உயிர்ப் பிழைத்திருக்கிறார். விபத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.
‘விமானத்தில் இருந்த ஏதாவது ஒரு கோளாறினால், இந்த விபத்து ஏற்பட்டதா?’ என்ற கோணத்திலும் விபத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் காம்ப்பெல் வில்சன் கூறியிருப்பதாவது, “விபத்தான விமானம் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. 2023-ம் ஆண்டு தான் இந்த விமானத்தின் பெரிய சோதனை நடத்தப்பட்டது. அடுத்ததாக, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்க இருந்தது.
அந்த விமானத்தின் வலது இன்ஜீன் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் மாற்றப்பட்டது. இடது இன்ஜீன் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு செய்யப்பட்டது.
விமானம் மற்றும் இன்ஜீன்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. விமான புறப்படுவதற்கு முன்பு, அதில் எந்தப் பிரச்னையும் இருந்திருக்கவில்லை.
விமானத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க, போயிங் 787 மற்றும் போயிங் 777 விமானங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளப் போகிறோம். இதற்கு அதிக நேரம் தேவைப்படும், விமான புறப்பாடுகளில் மாற்றம் ஏற்படும் என்பதால் எங்களது 15 சதவிகித சர்வதேச விமானங்களின் செயல்பாட்டை ஜூன் 20 (இன்று) முதல் ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்.
இதன் மூலம் எதிர்பாராத பிரச்னைகள் ஏற்படும்போது, அதை சரியாக கையாள முடியும். ஜூன் 20 (இன்று) முதல் ஜூலை பாதி வரை, சர்வதேச ஏர் இந்திய விமானத்தின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது”. என்று தெரிவித்தார்.