
நூற்றாண்டு பழைமை வாய்ந்த ரயில் நிலையங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மலை ரயில் நிலையம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தை மத்திய அரசின் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 90 சதவிகித பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
ஊட்டி நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வந்த ஊட்டி மலை ரயில் நிலையத்தை பழைமை மாறாத வகையில் புனரமைக்க வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதனை செவிமடுக்காத மத்திய அரசு தங்கள் போக்கிற்கு கட்டுமான வடிவமைப்பை மாற்றியிருப்பதாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஊட்டி ரயில் நிலைய சுவர்களில் பொன்மொழி கருத்துக்கள் சிலவற்றை
தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகள் அடங்கிய பதாகைகளை அமைத்துள்ளனர். இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட வாசகங்கள் முதல்

பாரதியார் எழுதிய கவிதை வரிகளை மதன் மோகன் மாளவியா எழுதியதாக வைக்கப்பட்டிருக்கும் பதாகைகள் வரை அனைத்தும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. ஊட்டி ரயில் நிலையத்திற்கு வரும் தமிழ் பற்றாளர்கள் பலரும் இந்த பதாகைகளை இணையத்தில் பகிர்ந்து கடுமையான எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், ” சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்பது மகாகவி பாரதியார் எழுதிய பாடல் வரிகள். தமிழ் மொழியை மேம்படுத்தவும், உலக அறிவை தமிழில் கொண்டுவரும் நோக்கில் பாரதியார் எழுதிய பொன்மொழியை மதன் மோகன் மாளவியா எழுதியதாக பெயர் வைத்திருப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை.

அதுமட்டுமின்றி தேசியம் , தேசிய மொழி, இந்தி போன்றவற்றை வழிந்து திணிக்கும் வகையிலும் பல பதாகைகளை வைத்திருக்கிறார்கள். மாற்றப்பட வேண்டும்” என்றார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஊட்டி ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ” வாசகங்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. தெற்கு ரயில்வே தலைமையில் இருந்து வைக்கச் சொன்னார்கள் வைத்தோம் ” என முடித்துக் கொண்டனர்.