
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அன்புள்ள அப்பா
நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.உடல் வலிகள் இன்றி சுகமாய் இருக்கிறீர்கள் தானே? மன வலிகள் ஆறாது ரணப்படுத்தும் என்பதை நன்கு அறிவேன்,தேற்றிக் கொள்ளுங்கள். கூடுமானவரை உங்கள் நினைவுகளின்றி வாழவே முயற்சி செய்கிறேன்.
நினைவுகளால் வாழ்ந்து விடலாம் என்பதெல்லாம் கவிதைக்கு வேண்டுமானால் இன்பமாய் இருக்கலாம். நினைவுகள் ஒரு போதும் இன்பத்தைத் தராது என்பதை நீங்கள் பிரிந்த பிறகுதான் புரிந்து கொண்டேன்.
அப்படி உங்கள் நினைவுகளுக்கும் எனக்குமானப் போராட்டத்தில் வெற்றி பெறுவதென்னவோ நீங்கள் தான்.மீண்டு வருவதும் மீண்டும் விழுவதும் அன்பின் எதார்த்தம் தானே.அதில் நான் மட்டும் என்ன விதி விலக்கா?
இதயம் உலர்ந்து, கண்ணீர் வழிந்து யாருக்கும் தெரியாமலிருக்க அழுகையை அடக்கும் போது தொண்டையில் குச்சியை சொருகியது போன்று வலித்த இரவுகள் இங்கு ஏராளம்.
நீங்கள் நோயுற்ற சமயத்தில் உங்களை அடிக்கடி சந்திப்பதைத் தவிர்த்த என்னை மன்னித்து விடுங்கள்.என் தனிப்பட்ட மருத்துவக் காரணங்கள் இருந்த போதிலும் உங்களின் வலி நிறைந்த அந்த தருணங்களைக் காணும் சக்தி என்னிடம் இல்லை என்பதே உண்மை.
அதற்கு தண்டனையாக தான் உங்கள் வாழ்வின் கடைசி ஆறு நாட்களில் உங்களுடனே பயணிக்க வைத்தானோ அந்த இறைவன்? உங்களை நினைக்கும் போதெல்லாம் அந்த இறுதி ஆறு நாட்களே மீண்டும் மீண்டும் நினைவில் வந்து என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்துகிறது.
அப்பா நீங்கள் இறப்பதற்கு முதல் நாள் எல்லாம் சரியாகிவிடும் நாளைக்கு நம்ம வீட்டுக்கு போய் விடலாம் என்ற என்னுடைய வார்த்தைகள் பொய் என்று தெரிந்தும் ஏன் தலையசைத்தீர்கள் ? எப்படியும் நாளைக்கு வீட்டுக்குத்தான் கொண்டு செல்ல போகிறார்கள் என்று அப்போதே தெரிந்து விட்டதா உங்களுக்கு?
பத்து வயதான பின்னும் நீங்கள் தூக்கிச் சுமந்ததும் நினைவில் இருக்கிறது.பசிக்குதுமா என்ற உங்களின் இறுதி வார்த்தையும் நினைவில் இருக்கிறது.
இதில் எதை நினைத்து நான் அழ? எனக்கான ஆறுதலை என்னிடமே தேடக் கற்றுக் கொண்டேன்.நிறைய நேர்மறை எண்ணங்கள் கொண்டவளாக மாறியிருக்கிறேன்.எனக்கான சரியானப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறேன்.எங்கிருந்து இந்தத் தெளிவும் துணிச்சலும் வந்தது?எங்கோ? யார் மூலமாகவோ ஒரு இயக்க சக்தியாக இருக்கிறீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
காற்றில் தான் கலந்துள்ளீர்கள் என்றால் காற்றையும் கட்டி அணைத்து அழுது தீர்த்து கொள்கிறேன்.
டாடி……. அன்பும்… முத்தங்களும்.
-S.சிவசங்கரி
மதுரை
