• June 20, 2025
  • NewsEditor
  • 0

 சென்னை நகரை அழகுபடுத்தும் தமிழக அரசின் தொலைநோக்கு திட்டமான ‘நமக்கு நாமே’ திட்டத்திற்கு உதவிடும் வகையில் சென்னை நகரின் மிகவும் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஆர்ஏ 1 கோடி ரூபாய் செலவில் சர் வி.பி. ராமன் சாலை என்னும் லாயிட்ஸ் சாலையை புதுப்பிக்க உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

‘நமக்கு நாமே’ திட்டம்

டிஆர்ஏ நிறுவனம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அந்த சாலையில் எல்இடி விளக்குகள், பசுமை புல்வெளிகள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கான நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தர உள்ளது. இந்த திட்டம் நகரின் முக்கியமான இடங்களை தூய்மையாக, அழகாக மற்றும் பசுமையாக பராமரிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டாண்மை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்த நான்கு மாதங்களில், லாயிட்ஸ் சாலையில், பாதசாரிகள் எந்தவித சிரமும் இல்லாமல் நடந்து செல்வதற்கான நடைபாதைகள், அமர்ந்து ஓய்வு எடுப்பதற்கான இருக்கை வசதிகள், பசுமை புல்வெளிகள், இரவை பகலாக்கும் வகையிலான எல்இடி விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை டிஆர்ஏ மேற்கொள்ள உள்ளது. இந்த திட்ட துவக்க விழாவில் டிஆர்ஏ நிறுவனத்தின் மூத்த தலைவர்களுடன் மாநகராட்சியின் 119வது உறுப்பினர் கமலா செழியன் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டிஆர்ஏ நிர்வாக இயக்குனர் ரஞ்சித் ரத்தோட் கூறுகையில்,  தனியார் பங்களிப்புடன் சென்னை நகரை அழகுபடுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு உள்ளது. இதில் நாங்களும் பங்கெடுத்து இருப்பது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நகரம் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாம் அனைவரும் வளர்ச்சி அடைய முடியும். இந்த வளர்ச்சி திட்டத்தில் எங்கள் பங்களிப்பாக எங்கள் தலைமையகம் அமைந்துள்ள லாயிட்ஸ் சாலையை நாங்கள் புதுப்பிக்க உள்ளோம். எங்கள் பயணத்தை துவக்கிய சாலைக்கு அழகு சேர்ப்பது என்பது எங்களுக்கு கிடைத்து மிகப்பெரிய ஒரு வாய்ப்பாகும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய 119வது வார்டு கவுன்சிலர் கமலா செழியன் கூறுகையில், அனைவரும் பயன்பெறும் ஒரு பணிக்காக மக்களும் நிறுவனங்களும் ஒன்றிணையும்போது ஒரு நகரம் உண்மையிலேயே ஒளிர்கிறது. நமக்கு நாமே திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சி நகரின் மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. எங்களின் தொலைநோக்கு பார்வைக்கு டிஆர்ஏ நிறுவனம் ஆதரவு அளித்திருப்பதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முயற்சி விரைவில் மக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசின் ஒத்துழைப்புடன் மிகப்பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

 இந்நிகழ்ச்சியில் டிஆர்ஏ நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி பணிக்குழு தலைவர் சிற்றரசு, 9வது மண்டலத் தலைவர் மதன் மோகன், ஆளுங்கட்சி துணைத் தலைவர் காமராஜ்,  மாநகராட்சி உதவி கமிஷனர் ஸ்ரீனிவாசன், செயற்பொறியாளர் முத்தையா மற்றும் மாவட்ட கார்ப்பரேஷன் துணைச் செயலாளர் துரை மற்றும் 119வது வார்டு வட்டச் செயலாளர்கள் கே. பிரபு மற்றும் கே.வி. மோகன் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

இந்த முயற்சி நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பொது-தனியார் ஒத்துழைப்பின் மூலம் சமூகம் சார்ந்த நகர்ப்புற வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சென்னை நகரின் வளர்ச்சி, பெருமை மற்றும் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களை ஆதரிப்பதில் டிஆர்ஏ  உறுதியாக உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *