• June 20, 2025
  • NewsEditor
  • 0

ஈரானிலும் – இஸ்ரேலிலும் தொடர்ந்து குண்டுமழைப் பொழிகிறது. இதில் அதிகளவில் பாதிக்கப்படுவது இருதரப்பிலிருந்தும் அப்பாவி மக்கள்தான். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என எந்த நாடும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூடத் தெரியவில்லை. அதேநேரம் இந்தப் போரின் நோக்கமும் பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. ஆம், அது அணு ஆயுதம்.

Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) தரவுகளின்படி 90 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல், `எங்களின் பக்கத்து நாடான ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது. அது எங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது” என்றக் குற்றச்சாட்டுடன், ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது.

இன்று 7-வது நாளாக இரு நாடுகளும் அணு ஆயுதம் என்ற ஒற்றைக் கொம்பை பிடித்துக்கொண்டு சொந்த நாட்டின் மக்களை, அவர்களின் உடமைகளை பலிகொடுத்துக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் – ஈரான் தாக்குதல்

ஒருபுறம் குண்டுமழை என்றால் மற்றொருபுறம் அணு ஆயுதம் இருக்கும் இடங்கள் தாக்கப்படுவதால் ஏற்படும் பேராபத்தையும் உலக நாடுகள் கவனித்து வருகிறது. சமீபத்தில் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த கவலைகள் அதிகரித்திருக்கிறது.

சர்வதேச அணுசக்தி நிறுவன (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, நடான்ஸின் எரிபொருள் செறிவூட்டல் ஆலையின் மேல் பகுதி அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும், ‘அங்கு 60 சதவீதம் வரை இருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம், அந்தத் தளத்திற்குள் இரசாயன மற்றும் கதிரியக்க மாசுபாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம், வெளிப்புற கதிர்வீச்சு அளவுகளில் மாற்றமில்லை. எனவே, சுற்றியுள்ள சூழலுக்கும் எந்த அச்சுறுத்தலும் தற்போது ஏற்படவில்லை’ என்றத் தகவலையும் தெரிவித்திருக்கிறார்.

அணுசக்தி தளம் மீது குண்டுவீசப்பட்டால்?

பொதுவாக அணு சக்தி நிலையத்தின் மீது குண்டு வீசும்போது எந்தப் பகுதி தாக்கப்பட்டது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்புகளின் அளவீடு மாறுபடும். கடந்த காலங்களில் இதுபோல அணுசக்தி நிலையங்களின் கதிர்வீச்சு அபாயங்களால், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது.

அணு ஆயுத சோதனை

உதாரணமாக கதிர்வீச்சு கசிவு ஏற்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அல்லது பயன்படுத்தப்பட்ட எரிபொருளைக் கொண்ட பகுதிகள் மீது குண்டு வீசப்பட்டால், அணு வெடிப்பு இல்லாமல் கூட அணுக் கதிர்வீச்சு கசியலாம். காற்று, மண், நீரில் கதிரியக்கத் துகள்கள் கலந்தால் சுற்றியிருக்கும் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். தொழிலாளர்கள், பொதுமக்கள் இதன் பாதிப்புக்கு ஆளாகலாம். எனவே, பொதுமக்கள் கட்டாயம் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட நேரிடும்.

கதிரியக்கப் பொருள் காற்றில் கலக்கும்படியான தீ விபத்துகளோ, சேமிப்புக் கொள்கலன்களில் உடைப்பு ஏற்பட்டாலோ, செறிவூட்டப்பட்ட கதிரியக்கப் பொடி காற்றில் கலந்தாலோ அது அந்தப் பகுதியை வாழத் தகுதியற்றதாக மாற்றிவிடும். அந்த ஆபத்திலிருந்து அந்தப் பகுதி மீண்டுவர நீண்ட காலம் ஆகும்.

உள்கட்டமைப்பு சேதம் ஏற்படலாம்

நடான்ஸ் போன்ற அணுசக்தி நிலையங்கள் பொதுவாக நாட்டிலிருந்து தொலைதூரத்தில், பாதுகாப்பான மண்டலங்களில் அமைந்திருந்தாலும், அவற்றின் மீதான வான்வழித் தாக்குதல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். இன்னுமொருமுறை நடான்ஸ் அணு உலைமீது குண்டுவெடிப்பு நிகழ்ந்தால், தீ விபத்துகள் ஏற்பட்டு ஆலை ஊழியர்களுக்கு காயம் ஏற்படவோ, உயிரிழப்பு ஏற்படவோக் கூட வாய்ப்பிருக்கிறது.

அணு ஆயுதப் போர்

இராஜதந்திரம்

அணுசக்தி நிலையத்தை குறிவைப்பதும், கைப்பற்றுவதும் தொலைநோக்கு ராஜதந்திரம் எனக் கருதப்படுகிறது. இந்தத் தாக்குதலால், இலக்கு வைக்கப்பட்ட நாடு அணுசக்தி மேற்பார்வை அமைப்புகளுடனான ஒத்துழைப்பைக் குறைக்கவோ, சர்வதேச ஒப்பந்தங்களிலிருந்து விலகவோ செய்யலாம். அதனால், அணுசக்தி திட்டத்தை துரிதப்படுத்தக் கூடும்.

முன்னோடி

இஸ்ரேல் அணுசக்தி கூடங்கள் மீதும், அதன் உள்கட்டமைப்பின் மீது மிக கவனமாக குண்டுவீசி அழிக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. ஆனாலும்கூட, இந்த நடவடிக்கைகளை ஒரு வகையான போர் வடிவமாக இயல்பாக்கும் அபாயத்தையும் முன்னெடுக்கிறது.

இஸ்ரேலின் அணு ஆயுத நிலையம் மீதான போரில், கவனமாக திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. அதாவது, இந்த தாக்குதலின் மூலம் மின் இணைப்புகள், மையவிலக்குகள் சுரங்கப்பாதைகளை இல்லாமல் ஆக்குவது. இந்த வகையான நடவடிக்கைகளால், கதிர்வீச்சு வெளிவராமலும், அதேநேரம் அணு உலை செயல்படாமலும் பாதுகாக்கப்படும்.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் – ஈரான் தாக்குதல்

இஸ்ரேல் கடந்த காலங்களிலும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியது. ஈராக்கின் ஒசிராக் அணு உலையை 1981-ம் ஆண்டில், அது செயல்படத் தொடங்குவதற்கு முன்பே குண்டுவீசித் தாக்கியது.

2007-ம் ஆண்டில் கிபாரில் உள்ள சிரியாவின் அணுசக்தி நிலையம் என சந்தேகித்த இடத்தை தாக்கியது. இந்த இரண்டு நிகழ்வுகளும் எந்தக் கதிரியக்க மாசுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை ஏற்கெனவே செறிவூட்டப்பட்ட யுரேனியம் அல்லது கதிரியக்கக் கழிவுகள் அந்த உலைகலில் இருந்திருந்தால் ஆபத்து பெருமளவில் ஏற்பட்டிருக்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *