• June 19, 2025
  • NewsEditor
  • 0

இணையதளம் வருமானம் ஈட்டுவதற்கான பல வழிகளையும் திறந்துவிட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இப்போதெல்லாம் பலரும் யூடியூப் சேனலைத் தொடங்கி விதவிதமாக வீடியோக்களை தயாரித்து சம்பாதித்து வருகின்றனர்.

அந்தவகையில் எந்த ஒரு பின்புலமும், அடிப்படை வசதிகளையும் பெற்றிடாத ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் பிற்போக்கு சங்கிலிகளை அறுத்து யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி அதில் கிடைத்த வருமானத்தில் சுயதொழில் ஒன்றைத் தொடங்கி, அதிலும் வெற்றிநடைப் போட்டு வருகிறார். அந்தப் பெண் கடந்து வந்த பாதை அத்தனை உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

கெளசல்யா சவுத்ரி

கெளசல்யா சவுத்ரி

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ‘குறி’ என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கெளசல்யா சவுத்ரி. 30 வயதுடைய கெளசல்யா விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். மருத்துவராக வேண்டும் என்பதுதான் அவரின் கனவு. ஆனால் 12-ம் வகுப்பு முடித்தவுடனேயே அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.

தன்னுடைய பயணம் குறித்து ‘The Better India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் கெளசல்யா சவுத்ரி, “ நான் என் அம்மாவைப் போல வயல் வேலைகளைச் செய்தேன். 12 ஆண்டுகள் படித்தது இதற்காகவா? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். திருமணம் ஆன பிறகு நான் வேலைக்கு செல்கிறேன் என்று சொன்னபோது வீட்டு வேலைகளை யார் செய்வார்கள்? என்று மாமியார் கேட்டார். நான் நான்கு சுவற்றுக்குள் இருந்தாலும் எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

7500 ரூபாயில் சாம்சங்

ஒரு நாள் 5 வயது சிறுமி யூடியூப்பில் சம்பாதித்த செய்தியைப் படித்தேன். யூடியூப் என்றால் என்ன? என்று என் கணவனிடம் கேட்டேன். அவர்தான் எனக்கு விளக்கினார். அப்போது என்னிடம் ஸ்மார்ட் ஃபோன் கூட இல்லை. எனது மாமனாரிடம் ஃபோன் வாங்கி தரச் சொன்னபோது அவரால் 3000 மதிப்புள்ள பட்டன் போனை மட்டுமே வாங்கி தர முடிந்தது.

பிறகு நான் சேர்த்து வைத்திருந்த காசையும் அம்மா சேர்த்து வைத்திருந்த காசையும் சேர்த்து 7500 ரூபாய்க்கு ஒரு சாம்சங் J2S ஃபோனை வாங்கினேன். அதன்பின் சமையல் வீடியோக்களை யூடியூப்பில் அப்லோட் செய்தேன். ஆரம்ப நாள்கள் கடினமாக இருந்தன.

கெளசல்யா சவுத்ரி
கெளசல்யா சவுத்ரி

உட்கார பலகை இல்லை. அலுமினிய கம்பிகளை வளைத்து ஒரு தற்காலிக ஸ்டாண்ட் அமைத்துக்கொண்டேன். வீடியோக்களை பதிவேற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. இணைய சேவை சரியாக இல்லாததால் கூரை மீது ஏறி மணிக்கணக்காகக் காத்திருப்பேன்.

வீடியோ எடிட்டிங்கை டுடோரியல் வீடியோக்களைப் பார்த்து கற்றுக்கொண்டேன். இவ்வளவு தடைகளைத் தாண்டி வீடியோக்களை உருவாக்கியதன் பலனாக ஒன்றரை வருடங்கள் கழித்து யூடியூப்பிருந்து 7500 ரூபாய் சன்மானமாக வந்தது. பலர் என் குடும்பத்தினரிடம் நான் செய்வதை நிறுத்தச் சொல்லி கேட்டார்கள். யூடியூப்பில் வீடியோக்களை வெளியிடுவது கலாசாரப்படி தவறு என்று அவர்கள் நினைத்தார்கள்.

திடீர் தடை, வருவாய் இழப்பு

ஆனால் நான் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவிட்டேன். கொஞ்ச நாள்களிலிலேயே ஒரு லட்சம் சப்ஸ்க்ரைபர்களை எனது சேனல் எட்டிவிட்டது. முதலில் இந்தியில்தான் எனது வீடியோக்களைப் பதிவு செய்தேன். ஆனால் அவை கிராம பெண்களுக்கு புரியவில்லை. அதனால் ராஜஸ்தானி மொழியில் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தேன்.

வீடியோக்களுக்கு நல்ல வியூஸ் கிடைத்தது. பத்து நாள்களில் ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் வந்தது. இரண்டு வருடங்களில் சம்பாதிக்காததை ஒரு மாதத்தில் சம்பாதித்தோம். அமெரிக்காவில் வசிக்கும் ஒரு ராஜஸ்தானி பெண், என் வீடியோவைப் பார்த்து, அவர் ராஜஸ்தானில் இருப்பதைப் போன்றே உணர்ந்ததாக கூறினார்.

கெளசல்யா சவுத்ரி
கெளசல்யா சவுத்ரி

அப்போதுதான் இதுவே என் பாதை என்று உணர்ந்தேன். அதன் பிறகு 2023-ல் சோனி டிவியில் இருந்து மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அழைப்பு எனக்கு வந்தது. அதில் கலந்துகொண்டேன். எனக்கு முறையான பயிற்சி இல்லை, ஆனால் என் கலாசாரத்தின் வழி எனக்கு கிடைத்திருந்த கைப்பக்குவம் இருந்தது.

அது போதுமானது. டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டபோது, 15 லட்சம் சப்ஸ்க்ரைபர்களையும், வீடியோக்களில் இருந்து வந்த வருமானத்தையும் இழந்தேன். எனது வருமான ஆதாரம் யூடியூப், இன்ஸ்டாகிராம், அல்லது பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் இருந்தது. அந்த தளங்கள் இல்லாமல் போனால், நான் என்ன செய்வேன்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

`நேரத்தை உருவாக்குங்கள்..’

அதனால் 2024-ல் ‘சிதி மார்வாரி’ என்ற பெயரில் உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். வெளிநாடுகளில் வசித்து பணியாற்றி வருபவர்கள் வெளிநாட்டு மசாலாப் பொருள்களால் இந்திய உணவின் அதே சுவையைப் பெற முடியாது. அதனால் அவர்களுக்காகப் பொருள்களைத் தயாரிக்கத் தொடங்கினேன். தற்போது எனது நிறுவனத்தில் 35 பெண்கள் வேலை செய்கிறார்கள்.

கெளசல்யா சவுத்ரி
கெளசல்யா சவுத்ரி

எங்கள் கிராமங்களில் உள்ள பெண்கள் வேலைக்காக வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. இங்கேயே அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்கிறோம். நேரத்திற்காக காத்திருக்காதீர்கள். நேரத்தை உருவாக்குங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாக இருந்தாலும், உங்கள் கனவை நோக்கி பயணியுங்கள்.” என்று உத்வேகம் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார் கெளசல்யா சவுத்ரி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *