• June 19, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-வது வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்று மாநில அரசு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மாணவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளும் மாநில அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இந்தி விருப்ப பாடம் மட்டுமே என்றும், கட்டாய பாடம் கிடையாது என்றும் மாநில அரசு விளக்கம் அளித்தது.

தேவேந்திர பட்னாவிஸ்

மாநில அரசு தற்போது புதிய அரசாணை ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. இதன் படி மாணவர்கள் மூன்றாவது மொழியாக இந்தி மட்டுமல்லாது எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஆனால் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட மொழியை தேர்வு செய்தால் மட்டுமே அதற்கு ஆசிரியர்கள் ஒதுக்க முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 20 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது மும்மொழி திட்டம் கட்டாயம் என்றும், அதேசமயம் மாணவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி கட்டாயம் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவு மறைமுகமாக இந்தியை கட்டாயமாக்குவதாக இருக்கிறது என்றும், இதில் மாணவர்களை நிர்ப்பந்தம் செய்வதாக இருக்கிறது என்றும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிப்பாடங்களை கற்றுக்கொடுப்பது தேவையற்றது என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

தேவேந்திர பட்னாவிஸ்

நாட்டிலேயே மகாராஷ்டிரா மட்டும்தான் மும்மொழி கொள்கையை அறிமுகம் செய்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், புதிய தேசிய கல்விக்கொள்கை அடிப்படையில்தான் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மும்மொழி கொள்கை குறித்து அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், “குழந்தைகள் 2 முதல் 8 வயதிற்குள் எதையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள். இந்தியை குழந்தைகள் சிறு வயதில் இருந்தே பேசுவதால் அவர்கள் இந்தியை கற்றுக்கொள்வதில் எந்த வித சிக்கலும் இருக்காது. அதோடு இந்தி ஆசிரியர்களும் பள்ளிகளில் தேவையான அளவு இருக்கின்றனர். எனவே புதிய ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை” என்று நீண்ட விளக்கத்தை கொடுத்திருக்கிறது. எனவே மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் இருந்து மூன்று மொழியை கற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *